December 30, 2007

ஏழிமலா-கேரளா கடற்கரையில் ஒரு மாலைப்பொழுதில்



















நடைமேடை எண்-2

நீண்ட பெருமூச்சுடன் கடக்கும்
ஒரு பழைய எஞ்சின்
பளிச்சிடும் கேமரா வெளிச்சத்திற்குப் பின்
இயல்புக்குத் திரும்பும் மனித முகங்கள்
சரக்கு ரயிலென்று தெரிந்ததும்
ஏமாற்ற முகப் பிச்சைக்காரன்
ரயில் புறப்படும் நேரத்தில்
விலகுவதற்குள் இறுகப் பற்றப்படும்
புதுத் தம்பதிக் கைகள்
அடுத்த ரயிலுக்காக அம்மாவுடன்
காத்திருக்கும் குழந்தை விடும்
பபிள்கம் முட்டையில்
திரும்பத் திரும்ப உடையும்
என் உலகம்

வெடிகுண்டு மிரட்டல்


அனாமதேயத் தொலைக்குரல் ஒன்று
அவசரமாய் நிறுத்தியது
புறப்படும் என் ரயிலை.
தொடையுயர மோப்பநாய்
முகர்ந்து பார்க்கவே பிறவியெடுத்ததாய்
ஏஸி, ஸ்லீப்பர் எல்லாமும் ஏறி
இருக்கையின் கீழ், பயணியர் பைகள்
எல்லா இடத்திலும்
அதன் மூச்சும்,வழியும் எச்சிலும்
எதுவும் இல்லை என்று உற்சாக விசிலடிக்கப்பட
தேடியது கிடைக்காமல்
சோகமாய் அமர்ந்தது ப்ளாக்கி..

December 29, 2007

சொற்கள்

கைக்குள்ளிருந்து விடுபட்ட பறவையாய்
எதிர்பாரா இலக்கு நோக்கி
எங்கெங்கோ சேரும் சில
எனக்குள் சிறைவைத்தும்
தப்பியோடித் தப்பர்த்தம் தரும்
சொல்லப்படாத சில
தவறான பொத்தான் மேல்
வெகுநாட்களாய் அழுத்திக் கொண்டு
பெரிதாய் பாரமூட்டும் பளுவுடன் சில
எந்தக் காதாலும் உரிமை கொண்டாடப்படாது
அனாதையாய் அலையும் சில
ஆள்மாறாட்டமாய், "எள் என்றால்
எண்ணெய்"யைப் பொருள் கூறி
எரிச்சலூட்டும் இன்னும் சில
ஒடுங்கிப் போய் உறைந்து ஆழத்தில்
பயன்படுத்தப் படாமலேயே இருக்கும் சில.
எவ்வளவு முயற்சித்தும் நினைவில் வராத
கடவுளின் சொற்கள்
பிரியத்தை வெளிப்படுத்தும்
அத்தனை சொற்களும்
அதிகப் பயன்பாட்டில் தேய்ந்து
உருவம் இழந்திருக்க
புதிய அகராதியை உருவாக்குகிறேன்
யாருக்கும் தெரியாத சொற்களுடன்.

December 28, 2007

கனவுகள் செய்வோம்-1

நேற்றிரவு என்ன கனவு கண்டீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? எனக்குக் கனவே வருவதில்லை என்று நீங்கள் சொன்னால் அது சும்மா உடான்ஸ்.நம் எல்லோருக்குமே கனவுகள் வருகின்றன.நம் தூக்கத்தில் சுமார் 25% நேரம் கனவு காண்பதில் செலவிடுகிறோம். கனவு காண்பது வலதுபக்க மூளையின் செயல்பாடு.ரெம் (REM-Rapid Eye Movement) நிலையிலே தான் நமக்குக் கனவுகள் வருகின்றன.ஒவ்வொருவரின் ஆளுமைக்கேற்ப கனவுகள் வேறுபடுகின்றன.பொதுவாக,உணர்ச்சிகளின் உந்துதல்கள்,நிறைவேறாத ஆசைகள்,வருங்காலத்தைப் பற்றின ஊகங்கள்,மனதை மிகவும் பாதித்த விஷயங்கள் என கனவுகளுக்கான கருக்கள் நிறைய உண்டு.
கனவுகள் எகிப்து போன்ற பண்டைய மரபுகளில் மிக முக்கிய இடத்தை வகித்து வருகின்றன.
இன்னும் நிறைய மரபுகளில், கனவுகள் கடவுளிடமிருந்து வரும் செய்தியாகக் கூடக்
கருதப்படுகின்றன.
அறிவியல் முன்னேற்றத்திற்குக் கனவுகள் ஆற்றிய பங்கு அளப்பரியது.பெரிதும் உதாரணமாய் சொல்லப்படும் பென்சீன் வளைய மூலக்கூறு அமைப்பு கெக்கூல் என்கிற விஞ்ஞானியின் கனவில் தோன்றியது தான்.ரஷ்ய விஞ்ஞானி மெண்டலீவ் தனிம வரிசை அட்டவணையையும்,எலியாஸ் தையல் இயந்திரத்தைக் கண்டறிந்ததும் அவர்களின் கனவுகளின் உதவியால் தான்.ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியின்
பெரும்பகுதி அவரது கனவுகளில் கண்டறியப்பட்டதே.
சிக்மண்ட் ஃப்ராய்டு அதற்கு முன்பிருந்த கனவுகள் பற்றிய எல்லாக் கோட்பாடுகளிலிருந்தும் விலகி,"ஒடுக்கப்பட்ட நம் ஆசைகளின் வெளிப்பாடே கனவுகள்:அவைகள் பெரும்பாலும்
காமத்தை அடிப்படையாகக் கொண்டவைகளே" என்றார்.
என் அம்மாவிற்கோ, பாட்டிக்கோ ஏதேனும் துர்சொப்பனங்கள் வந்த ஒன்றிரண்டு நாட்களிலேயே யாரேனும் தூரத்து அல்லது பக்கத்து உறவினரின் மரணச்செய்தி வந்து விடும்.
எங்கள் ஊருக்குப் பக்கத்திலிருக்கும் தேவன்குறிச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் பாறையின் மேல் இரவில் உறங்குகையில் வரும் கனவுகள் நிச்சயம் பலிக்கும் என்று என் நண்பனின் தாத்தா சொல்வதுண்டு.
எனக்கு வரும் கனவுகள் கொஞ்சம் விசித்திரமானவைதான்.என் கனவுகளில் நான் எழுதும் மிக நல்ல கவிதைகள் கண்விழித்ததும் ஒரு வரி கூட நினைவில் இல்லாமல் போவது என் வாசகர்களின் துரதிருஷ்டமே.சின்ன வயது முதல் அடிக்கடி எனக்கு வரும் ஒரு கனவு, ஒரு பிரம்மாண்டமான நூலகத்தில் நான் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருப்பது தான்.திரும்பத் திரும்ப வரும் இந்தக் கனவால், அந்த நூலகத்தில் எந்த இடத்தில் எந்தப் புத்தகம் இருக்கிறது என்பது கூட எனக்கு மனப்பாடமாய் ஆகியிருந்தது.
சில கனவுகளின் தொடர்ச்சி இன்னொரு நாளில் வேறொரு கனவாய்த் தொடரும்.
நிறைய முறை மாடி அல்லது உயரமான இடங்களிலிருந்து குதித்துப் பறப்பதைப் போல அடிக்கடி கனவு வரும் (இதனால் பயந்து போய் சின்ன வயதில் மொட்டை மாடியில் உறங்குவதை நிறைய முறை தவிர்த்திருக்கிறேன்)
90களின் இறுதியில் என்னை மிகவும் பாதித்த ஒரு பெண்ணிடம் எனக்கு நேர்ந்த அனுபவங்களின் மொத்த சாராம்சமும் அதற்கு சில மாதங்களுக்கு முன்பே எனக்கு ஒரு பெரிய்ய்ய்ய கனவாக வந்து, அதை என் டைரியில் எழுதியும் வைத்திருக்கிறேன். விடியற்காலை 3 மணிக்கு எழுந்து எங்காவது ரயிலையோ, பஸ்ஸையோ பிடிக்கப் போக வேண்டுமென்றால், சொல்லி வைத்தாற் போல் 2.58க்கு ஏதேனும் ஒரு பயங்கரக் கனவு வந்து 2.59க்கு என்னை எழுப்பிவிடும் விசித்திரம் பல வருடங்களாக எனக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
நம் ஆழ்மனம் பிரபஞ்சத்தோடு தொடர்பு கொள்ளும் முயற்சியே கனவுகளின் வெளிப்பாடு என்று கூட சொல்லலாம்.

சிறிது உறக்கத்திற்குப் பிறகு... தொடரும்.

December 22, 2007

3.5 கவிதைகள்

1.ரயிலின் வழியே

ரயில் வராத தண்டவாளத்தை
இருபுறமும் பார்த்துக் கடக்கையிலும்
பதட்டமாய் சிறுமியின் முகம்
உணவைக் கொட்டுபவர்களுக்கு
மன ஆறுதல் தரும் காக்கைகள்
ஸ்டேசனில் சண்டையிட்டு
சிறிது பயணித்தவுடன் விட்டுக் கொடுத்து
கைகோர்க்கும் தண்டவாளங்கள்
விரும்பினாலும் தொடரமுடியா
"நகர்வது நம்முடையதா, பக்கத்து ரயிலா
என உணர முடியா" மாய கணங்கள்
கீழே பயணிக்கத் தயாராய்
ஜன்னல் கண்ணாடியில்
பனித்துளி.


2.பிச்சை

சிக்னலில் குறையும்
ஒற்றை இலக்க எண்கள்
கொஞ்ச நஞ்சமிருக்கும்
மனிதாபிமானத்தையும்
பூஜ்யமாக்கும்

3. Vth C

மழைக்கு வழிவிடா
புது ஓடுகள்
சிமெண்ட் தரையில்
காணாமல் போன நாங்கள் செதுக்கிய
இந்திய வரைபடம்
வீட்டுக்கு விடும் மணி கணக்கிட
வெயில் வட்டங்கள் மீது தெளித்த மை
வெள்ளையின் வயிற்றில்
எண்ணிக்கையில் அதிகரித்து விட்ட
பொம்பளப் புள்ளைங்க.
வசந்தா டீச்சரின் கணக்கைக்
கவனிக்காமல்
வெளியே வேடிக்கை பார்க்கும்
இன்னொரு நான்.

3.5 என் பெயர் பொறித்த
அரிசியை எடுத்து உண்ணுகையில்
காலம் கெளவிப் போனது
அதன் பெயர் எழுதியிருந்த
என் தலையை.

December 14, 2007

சாயங்கால வானமும், ரயில் நிலையமும்

விருப்பப்படி வண்ணக்காட்சிகளை
நொடிக்கொருமுறை மாற்றும்
சாயங்கால வானம்
ஸ்கூட்டரின் பின்
அம்மா மடிக் குழந்தை
ரசித்து மழலையில் பகிர முயல
அந்த உலகின் சாவியைத்
தொலத்தவளின் மனம்
ஹாரன் ஒலிக்குப்பைகளால்
நிரம்பி வழிந்தது.

* * * * * *

ரயில் நிலைய நீண்ட படிகளில்
சத்தமாக ஒண்ணு, ரெண்டு எண்ணும்
பிஞ்சுப் பாதங்கள்
பொறுமையின்றித் தவிப்பில்
கடைசிப் படி.

* * * * * *

கடப்பவர் பார்வை படும்
ஒவ்வொரு முறையும்
புதிதாய் உடையும்
என் முடமான கை.

மார்கழி மகிமை

எல்லா மாதங்களுமே நல்லவைதான் என்றாலும் சூரியன் தனுர் ராசியில் சஞ்சரிக்கும்
மார்கழிக்கென்று சில விஷேசங்களுண்டு.
டிசம்பரின் மத்தியில் தொடங்கி, ஜனவரியின் மத்தியில் முடியும் இந்த மாதம் உலகம்
முழுவதும் உள்ள மக்களை நல்ல விதமாய் பாதிக்கிறது.இஸ்லாத்தில்,ஆபிரகாம், தன் மகன்
இஸ்மாயிலை அல்லாவிற்காக திருப்பலி கொடுத்துக் காணிக்கையாக்கும் "ஈத் பெரு நாள்" வருவது இந்த மார்கழியில் தான்.உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரையின் நிறைவைக் குறிக்கும் இந்த நாளில் புத்தாடை அணிந்து தங்களுக்கு பிரியமான வீட்டு விலங்குகளை அல்லாவிற்குப் படைத்து தங்களின் தியாகத்தை வெளிப்படுத்துவர்.
கிறிஸ்தவர்களது முக்கியமான பண்டிகையான இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் வருவதும் இந்த மாதத்தில் தான்.
பகவத்கீதையில், கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனிடம்,"மாதங்களில் நான் மார்கழி" என்கிறார்.
இந்து சமயத்தின் வேதங்களும், ஆகமங்களும், மார்கழி மாதத்தை இறை வழிபாட்டுக்கு மிகவும் உகந்த மாதமாகக் குறிப்பிடுகின்றன.சொல்லப் போனால், இறைவழிபாடு தவிர மற்ற எல்லாவற்றையுமே ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு இந்த மாதம் முழுவதுமே ஆன்ம வளர்ச்சியில் ஈடுபடும் வழக்கமும் இங்கு உண்டு.எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில்,மதுரைக்கு அருகிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த கோதை நாச்சியார் மார்கழியில் தான் திருப்பாவைப் பாடல்கள் பாடி, பாவை நோன்பிருந்து,
"நெய்யுண்ணோம்,பாலுண்ணோம்,கண்ணுக்கு மையிடோம்" என்று,இறைநிலை உணர்வுக்கெதிரான எல்லாவற்றையும் ஒதுக்கி, எம்பெருமான் பாதம் சேர்ந்தாள். (இன்றும் மார்கழியில் திருமணம் போன்ற எந்த விஷேசங்களும் நிறைய சமூகங்களில் நடைபெறுவதில்லை)
வைணவர்களுக்குத் திருப்பாவை என்றால், சைவர்களுக்கு மாணிக்க வாசகர் எழுதிய திருவெம்பாவை.
நமக்கு பிரம்ம முகூர்த்தம் அதிகாலை நான்கு மணிமுதல் ஆறு மணி வரை.அது போல, தேவர்களுக்கு மார்கழி மாதம் முழுவதுமே பிரம்ம முகூர்த்தம் தான். இந்த மார்கழியில்,சிவபெருமானும், ஏனைய தேவர்களும் பூமிக்கு வந்து தவமிருப்பதாக ஐதீகம்.சிவபெருமான், சிதம்பரத்தில் நந்தனாருக்காக, நந்தியை சற்றே தலையைத் திருப்பச் சொல்லிக் காட்சியளித்து நந்தனாரை ஆட்கொண்ட "திருவாதிரைத் திருநாள்" வருவதும் மார்கழியில் தான்.இந்தியா முழுவதும் உள்ள கோவில்களில் மார்கழி மாதத்தில் அதிகாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.மார்கழி ஏகாதசியில் விரதமிருந்து,இரவு முழுவதும் விழித்திருந்து இறைவனது நாமம் சொல்லி, விடியலில் பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் வழியே பக்தர்கள் பிரவேசித்துப் பரவசமடைவர்.விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால், மார்கழியில் அதிகாலைப் பொழுதில்,வளி மண்டலத்தில்தூய்மையான ஒஸோன் படலம் பூமிக்கு மிகத் தாழ்வாய் இறங்கி வருவதாகவும், அதை சுவாசித்தால், நோய் எதிர்ப்பு சக்தியும், ஆரோக்கியமும் கிடைப்பதாலேயே நம் முன்னோர்கள் அதை இறைவழிபாடு என்ற பெயரில் நாம் கேள்விகள் கேட்காமல் பின்பற்றும் சடங்குகளாக்கி விட்டனர் என்பதும் நிரூபணமாகாத உண்மையே.
மார்கழி பஜனையில் ஆண்கள் சத்தமாகப் பாடல்கள் பாடி,(அப்போது நன்றாக மூச்சு விட்டு ஓஸோனை உள்ளிழுத்து)ஊர் முழுவதும் சுற்றி வருவர்.பெண்கள் குனிந்து நிமிர்ந்து பயிற்சி செய்யும் வண்ணம் பெரிய பெரிய கோலங்களை விடியற்காலையில் போடும் போதும் அதே நல்ல விளைவுகள்.(இப்போது முன்னிரவு பதினோரு மணிக்குக் கோலம் போட ஆரம்பித்து ஒரு மணிக்கு முடித்து காலையில் எட்டு மணி வரை உறங்கும் இந்தக் காலத்துப் பெண்களுக்கும் இந்தக் கட்டுரைக்கும் எந்த சம்பந்தமுமில்லை)
எங்கள் ஊரில் அதிகாலையில் எழுந்து, குளிரில் குளித்து பஜனை பாடி, ஊர் வலம் வந்த என் பள்ளி நாட்கள் மனதை வருடிச் செல்லும் மயிலிறகுக் காலங்கள் (என் மூன்றாம் வகுப்புக் காலங்களில் குளிக்காமல்,பல் மட்டும் துலக்கி (பிரசாதம் வாங்க)பஜனைக்குச் சென்று இருக்கிறேன்.)
கார்த்திகையில் மாலை போட்டு, விரதமிருக்கும் ஐயப்ப பக்தர்கள் சரணம் சொல்லி, இருமுடி தாங்கி, ஒருமனதாகி சபரிமலை யாத்திரை செண்று விரதம் முடிப்பது இந்த மாதத்தில் தான்.(எங்கள் தெருவில் உள்ள ஐயப்பன் கோவிலில் துண்ட ராமசாமி (தொண்டர் ராமசாமி தான் அப்படித் தேய்ந்து விட்டது) மார்கழி முழுவதும் போட்ட மைக் செட் பாடல்கள் நான் ஒவ்வொரு அரைப் பரீட்சையிலும் குறைவாய் மார்க்குகள் எடுத்ததற்கு ஒரு சாக்கு சொல்ல ரொம்ப காலம் பயன்பட்டது)
மார்கழியில் விரதம் இருப்பது உடல் நலத்திற்கு மட்டுமல்லாது மன வலிமையை வளர்க்கவும் உதவும். இந்த ஒரு மாதத்தை இறை உணர்வுடன் சிரத்தையாய்க் கழித்தால் அதனால் வரும் உன்னத குணங்களும், உடல் மற்றும் மன நலன்களும் அடுத்து வரும் வருடம் மட்டுமல்லாது வாழ்நாள் முழுவதும் நம்முடனிருக்கும். இந்த வாழ்க்கையை சிறப்பாய் வாழவும்,நம் குறிக்கோள்களை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தவும் மார்கழி நமக்குத் துணையாய் இருக்கட்டும்.

November 22, 2007

ரகசியம்

மூன்றாம் நபருக்குத் தெரியக் கூடாதென்று
சத்தியம் வாங்கி சொல்லப்பட்டவைகளில் சில
நான்காம் நபரான என்னிடத்தில் ரகசியமாய்
காதருகே கைவைத்துப் பகிரப்பட்ட ரகசியம்
உள்ளங்கை நீராய்க் கசியும் மனத்துளைகளூடே
விஷயங்களுக்கு முளைக்கும் இறக்கைகள்-
அவை ரகசியமாகையில்
மூச்சாய்ச் சிறைப்படுபவை ஒரு பலவீன கணத்தில்
பெருமூச்சாய்த் தப்பித்து சுவாசிக்கும் சுதந்திரமாய்
முடிவற்றுத் தொடரும் சங்கிலியின் கண்ணிகளாய்-
ரகசியம் அறிந்தோர் எண்ணிக்கை
உங்களுக்குள் புதைப்பதற்கு மாறாய்
இன்னொருவர்க்குச் சொன்ன எதுவும்
ரகசியமல்ல சத்தம் குறைந்த செய்தி
என்றாலும் என்னிடமுண்டு சில ரகசியங்கள்
சிதையிலிருந்து விறைத்தெழும் என் மண்டையோட்டை
பலம் கொண்டடிக்கும் வெட்டியானுக்கும் வெளிப்படாமல்.

யாரும் பார்க்காத போது

யாரும் பார்க்காத போது
திசைகள் தம் எல்லையைத் திருத்தும்
யாரும் பார்க்காத போது
காலம் சற்று ஓய்வெடுத்துப்
பின் எப்போதும் போல் நகரும்
யாரும் பார்க்காத போது
என் அறைக்குள் வரும் வானம்
யாரும் பார்க்காத போது
தேவதைகளுடன் பேசும் குழந்தைகள்
யாரும் பார்க்காத போது
புணர்ந்து முடித்த இயற்கை
தொடரும் தன் சிருஷ்டியை
யாரும் பார்க்காத போது
பூமிக்கு வந்து போகும் கடவுள்
எந்த விழிகள் மூடக் காத்திருக்கிறதோ
இன்னும் திறக்காத என் மூன்றாம் கண்?

குட்டிக் கவிதைகள்

எடுக்க மறந்த அழைப்பின்
பெயர் தெரியா எண்கள்
எதுவும் சொல்லாவிடினும்
எழுப்பும் கேள்விகள் ஏராளம்



விடியல் பறவைகளின்
எழுப்புதலைப் புறக்கணித்து
காற்றின் உலுப்பலில்
புரளும் இலைகள்


யாருமற்ற வானில்
அடுக்கி வைக்கப்பட்ட காற்றை
கலைத்துப் போடும்
பறவை



இலக்கு நோக்கி இறுக்கமாய்
தற்கொலைப்படை வீரர்கள்
தீப்பெட்டிக்குள்


தொலைந்து விட்ட
முதல் அலையைத் தேடி
தொடரும் அலைகள்


சரியாக நினைவில்லை
என் பழைய புத்தகத்தில்
ஒளிந்து கொண்டிருப்பது
நான் வைத்த மயிலிறகா
அது போட்ட குட்டியா?


நாளைய திட்டங்களை எழுதுகையில்
என் பின்புறம் ஒலித்தது சிரிப்பொலி
நான் திரும்பியவுடன் ஓடி மறையும்
நாளை

சில புகைப்படங்கள்

சுனாமிக்காக சிறையில்

இடைவெளி
பசி

இன்னும் சில பாரங்கள்

மூச்சுத் திணறும் மரங்கள்

மாலை நேர மாநாடு

மகிழ்ச்சியை விற்கும் மழலைகள்

சின்னக் கைகளில் பெரிய பொறுப்பு

செல்லக்கடி

விதிகளை மீறிய ஓட்டம்

இயலாமை

ஓய்வு

முளைத்தல்

பயண நினைவாய்க்
கொணர்ந்த மண்ணில்
பெயர் தெரியாத சில விதைகள்
எதிர்பார்த்துப் புதைத்து
வெகு நாட்களாகியும்
எதுவும் முளைக்கவில்லை
இந்தக் கவிதையைத் தவிர

நம்பிக்கை

மூன்று வினாடிகளுக்கு மேல்
பார்வையை நிறுத்த முடியவில்லை
எந்தக் கண்களிலும்
வலிய உதவுபவர்கள் மீது வரும்
அதிகப்படியான சந்தேகங்கள்
வார்த்தைகளைப் புறக்கணித்து
இடைவெளியைத் துருவும்
அனர்த்த வாசிப்புகள்
வளர்ப்பு நாயின்
வாலும் நாக்கும் மறைந்து
பூதாகரமாய்த் தெரியும் கோரைப் பற்கள்
நம்பிக்கையை எழுதி முடிப்பதற்குள்
அழைக்காமல் முன் வந்தமரும் அவ
கடவுளைக் கைகூப்பும் கணத்திலும்
கால்வாசி மனம் அடைத்த பிசாசு எண்ணங்கள்
மறுதலித்தலையே இயல்பாக்கி
மறந்துபோன இயல்பைத் தேடும் மனம்
வேண்டாத இரண்டெழுத்துக்களை
வெட்டும் உறுதியுடன்
கோப்பையில் துளி இடமும் வைக்காது
நாள் முழுதும் நிரப்பிக் கொண்டிருக்கும்
நான்.

கூழாங்கற்கள்

சாயங்கால நகரும் ஆற்றில்
கூழாங்கற்கள்
மௌனமாய் சில
ஆற்றோடு பேசும் சில
கொஞ்சம் தவிப்பாய்
என் உள்ளங்கையில் சில

8:31

வழக்கமான முகங்கள் வருமதில் நிறையவே
செய்தித்தாளிலோ,இயர்ஃபோன்களுக்கிடையிலோ
மனதை நுழைத்து உலகம் மறந்த சிலர்
உட்கார இடம் கிடைத்த உற்சாகத்தில் சிலர்
ஸ்ரீராமஜெயம் போல ஏதோ எழுதும் சிலர்
விட்டுப்போன விடிகாலை உறக்கத்தைத்
தொட்டுத் தொடர்ந்தபடி சிலர்
வரும் ஸ்டேசனில் இறங்காவிடினும்
வாயிற்படியின் வாயில் சிலர்
ஒட்டப் பட்டிருக்கும் துண்டுப் பிரசுரங்களை
பட்டும் படாது பார்த்தபடி சிலர்
பரீட்சையோ என்னவோ பயம் பூசிய முகத்துடன்
பள்ளிப் பிள்ளைகள் சிலர்
அதற்கப்புறம் வரும் எதிலும்
அளவிலடங்காக் கூட்டமென்பதால்
எப்போதும் நான் ஏறும் 8:31 ரயிலிலே
அடுத்தவர் செய்கையை அதிமுக்கியமாய் ஆராயும்
இலக்குகளற்று என்போலிருக்கும் இன்னும் ஒரு சிலர்

இல்லாத சில ஹைகூக்கள்

சிரித்துக் கொண்டே
அழும் காந்தி
லஞ்சப் பணத்தில்.


பல்லிடுக்கில் முடிகள்
அசூயையற்று
சீப்பு.


7கழுதை வயதாகியும்
12க்கு மேல் தெரியாத
கடிகாரம்.


கிழ ஆலத்தின்
ஊன்றுகோலாய்
விழுதுகள்.


கண்ணாமூச்சியில்
நிலா,பூமி
அமாவாசை.


கவிதையின்
போன்சாய்
ஹைகூ.

கடவுளின் முகவரி
அடைப்புக் குறிக்குள்
( )


சந்தேகப் பிராணியாய்
திரும்பத் திரும்ப எண்ணும்
கடிகாரம்.

November 19, 2007

கடவுள்

விரதமிருந்து,மந்திரம் ஜெபித்து
பாத யாத்திரையாய் மலையேறி
கடவுளைக் கண்டேன்
நான் அங்கு இல்லை.

அருகாமை

தேங்காய் எண்ணெய் இருந்தும்
காலம் பூராவும் பரட்டைத் தலையாய்
தென்னை மரங்கள்.
அதனருகில் இருந்தும்
அடி மூக்கைக் காணமுடியா கண்கள்.
உள்ளூர்க் கோவில்களுக்குப்
போகக் கிடைக்கும் நேரம்
எப்போதுமே நாளைதான்.
நம்முள் இருப்பதாலேயே
அந்நியமான கடவுள்.
வயதான பெற்றோர்க்கு
மரணத்தின் பின்னரே
முழுப்பசி தீர்க்கும் பிண்டங்கள்.
அருமை தெரியாத எதுவும்
அருகாமையில் இருந்தும்
அகப்படாத தூரத்தில்.

மும்பை

அலுவலகம் விரையும் அம்மாக்களிடம்
அரை முத்தம் பெறும் குழந்தைகள்
விழிக்கும் முன் கிளம்பி
உறங்கிய பின் வந்து
அந்நியமாகும் அப்பாக்கள்.
கணவனிடம் தன்னைவிட அதிக நேரம்
உடனிருக்கும் ரயில்கள் மீது
பொறாமையுறும் மனைவிகள்.
நூறுக்குக் கட்டாதென்று மறுத்து
திரும்ப அழைத்து
நாற்பதுக்கு விற்கும்
பிளாட்பார வியாபாரிகள்.
தங்களைத் தாங்களே
எதோ ஒரு திசையில்
எய்து கொள்ளும் அம்புகளாய்
சிறார்கள்.
எப்போதும் கிடைக்கும்
வடாபாவ் வும், விலைமாதர்களும்.
ரசிக்கும் கண்களுக்காய்
சலித்துப்போன காத்திருப்பில்
மெரைன்ட்ரைவும்,ஜுஹு பீச்சும்.
உண்ணவும்,உறங்கவும்
புணரவும்,சண்டையிடவும்
எப்போதாவது வாழவும்,
பன்னெண்டுக்குப் பத்தில்
விசாலமான வீடுகள்.
முகம் தெரியாத
அண்டை வீட்டுக்காரர்கள்.
வேண்டாத ஏழாவது விரலாய்
விருந்தாளிகள்.
பிடிமானம் ஏதும்
தேவைப்படாத ரயில்கள்.
ஐந்து நிமிடங்களுக்கொரு முறை
தரையிறங்கும் அலுமினியப் பறவைகள்.
அதை ரசிக்க நேரமின்றி
எகனாமிக் டைம்ஸில் கண்கள்.
நம்பிக்கைகளை ஒளித்து வைத்திருக்கும்
நாளைகள்.
இடைவெளியின்றிச் சக்கரங்கள் ஏறி
தார்ச் சாலையில் அப்பிக் கிடக்கும்
மனிதம்.

அவரவர் யோக்யதை

தற்செயலாய்த் தெரிந்தது
மனைவியின் பாஸ்வேர்ட்.
உபயோகித்து உள்ளே செல்ல...
சின்ன வயது ஏக்கங்கள்
ஏமாற்றங்கள்
வயதின் பிடியில்
எதிர்க்கத் திராணியற்ற
பலவீன கணங்கள்
முள் சிநேகம் கிழித்த உடை.
கிணற்றின் அடியில்
கிடப்பவையாய் எல்லாம்.
வெளியேறி, ஏதோ நினைத்து
அவளுக்கும் தெரிந்த
எனது பாஸ்வேர்டை
கவனமாய் மாற்றினேன்.
அவரவர் யோக்யதை
அவரவர் பாஸ்வேர்ட் அறியும்.

உறுப்புகள்

வெறிக்கப்பட்டு வெறிக்கப்பட்டு
மியூசியத்தின் உயிரற்ற உடலாய்
கழுத்துக்குக் கீழே எனது உறுப்புகள்.
நெரிசலில் உரசும் ஆண்களின்
எந்த உறுப்பும் அவன் குறியாகி
காம விந்துவை வெளியேற்றும்.
எதிர்ப்படும் எவனும் இன்று
அதிசயமாய் முகத்தையே முறைக்க
கண்ணாடியில் பார்த்தேன்
முகத்தில் முளைத்திருக்கிறதோ
முலைகள் ஏதுமென்று.

November 18, 2007

காமம் தாண்டிய கலையழகு

குழந்தைத்தனம்

சின்ன வயதில் எனக்கு
சிறகுகள் இருந்தன.
செடி கொடிகளையும்
பெரிதாக்கும் காலம்
என் சிறகுகளை மட்டும்
குள்ளமாக்கியது.
மறதியாய் வெளிப்படும்
சிறகுகளைக் கொத்த
கூரான அலகுகளுடன்
காத்திருக்கும் உலகம்.
கவனமாய் மறைத்துக் கொள்கிறேன்
பெரிய சட்டை அணிந்து.

November 17, 2007

வெற்றிலைக் கடை வாளி

தொலை நோக்குப் பா(ர்)வை

தலைவனுக்கு அன்னத் தூது

ஒரு சாயங்கால உரையாடல்

பலூனால் செய்யப்பட்டது உலகு

குளிருக்கு இதமாய்க் கொஞ்சம் பீடி

நெஸ் காஃபியா? ப்ரூவா?

அவரவர் தேடல் அவரவர்க்கு

குருவியை ரசிக்கும் சூரியன்

வாங்குபவர்க்கான காத்திருப்பில் கடவுள்

சாவி

நடுத்தெருவில் கிடந்ததொரு சாவி.
தவறி விழுந்ததோ
வலுவில் வீசப்பட்டதோ.
எத்தனையோ கால்கள் பட்டு
விழுந்த இடம்,இருக்குமிடம்,
போகுமிடம் ஏதுமறியாது,
இப்போது என் கையில்.
அங்கேயே போட்டாலும்
எடுத்துக் கொண்டு சென்றாலும்
எந்த நிகழ்வின் நகர்வும்
திரும்ப மீள முடியாத்
தவறான திசை நோக்கியே.
பூட்டின் உலகம் திறக்கும் சாவியின்
பூட்டிய உலகம் திறக்கப் படாமல்
அதன் கையில் அதனையே வைத்துக்
குழம்பியபடி நடுத்தெருவில்.

November 16, 2007

ரயில் பயணத்தில்


சிவப்பை இழந்தவள்
பச்சை அசைக்க
நகரத் துவங்கும் ரயில்.


காசுக்காக மேஜிக் செய்யும்
செப்பிடு வித்தைக்காரனாய்
தூரத்தை விழுங்கும் ரயில்.


விரும்பாவிடினும்
விடியற்காலை
ஜன்னல் காட்சியாய்
கழிப்பறை இல்லாதவர்களின்
தொலைந்த வெட்கங்கள்.


உட்கார்ந்திருப்பவர்களின்
ஊசிக் கண்களை
காந்தமாய்க் கவரும்
கடக்கும் பெண்கள்-
எந்த வயதினராயினும்.


அதிசயமாய்
ஒரு கிறுக்கலும் இல்லாத
கழிப்பறை.


சக மனித நம்பிக்கைகளின்
அளவுகோல்களாய்
விதவிதமான சங்கிலிகள்
பருத்த பூட்டுக்களுடன்.


மூன்றாம் ஏசிக்குள்
மெளனத் திரையைக் கிழிக்கும்
கத்திரியாய் முன்னேறும்
விற்பவன் குரல்.


நீண்ட பயணத்தில்
பேட்டரி தீர்ந்த பின்னும்
கேட்கும் பாடல்
மனதிற்குள்.


புறக்கணிக்கப்பட்ட காதலாய்
சின்னச் சின்ன ஸ்டேசன்கள்.


வளைவுப் பாதையில்
கடைசிப் பெட்டியின்
இருப்பை ஊர்ஜித்து
திருப்தியாய் தொடரும் இஞ்சின்.


அடுத்த ரயிலுக்காக
போலியாக பின்னோக்கி நகர
காத்திருக்கும் மரங்கள்.


டவர்த் தாயைத் தொலைத்த
செல் குழந்தைகள்
சிணுங்கலின்றி பயமெளனத்தில்.

நகரத் தந்தையின்
வருகை அறிவிக்க
முதலில் ஓடி வரும்
குழந்தை வீடுகள்.

மனிதக் குழந்தைகளுடன் செல்லும்
ரயில் நோக்கிப் பெருமூச்செரியும்
மலட்டுச் சரக்கு ரயில்.


நல்ல கவிதை தேடி
புத்தகத்தில் மூழ்கியிருக்கையில்
தவற விட்டு விட்டேன் -
ஜன்னலுக்கு வெளியே தோன்றி மறைந்த
அதைவிட நல்ல கவிதையை.


பிளாட்பாரம் இறங்கி
வெளியேறும் முகங்களில்
ஒன்றேனும் திரும்பிப் பார்க்காத ஏக்கத்தில்
இதயம் கனத்துத் தயாராகும்
அடுத்த பயணத்துக்கு.

November 13, 2007

புரண்ட உலகங்கள்

ஏதோவொரு ஸ்டேசனில்
குலுங்கி நின்றது ரயில்.
ஜன்னலின் உள்ளிருந்து வந்த
பூச்சியொன்றை
சுண்டி வெளியேற்றிய கணத்தில்,
அதன் உலகைப்
புரட்டிப் போட்டதாய் அதிர்ந்தேன்.
துழாவி பூச்சியை எடுக்க எத்தனிக்கையில்
நகரத் துவங்கியது ரயில்
என்னுலகைப் புரட்டிப் போட்டு.

நிகழாத எதிர்பார்ப்பு

பஸ் சக்கரத்தினடியில்
சற்றே நசுங்கின சைக்கிள்.
ரத்தக் காயம் ஏதுமில்லை.
சற்றே ஏமாந்த முகங்கள்
கலைந்து விரைந்தன
அவரவர் திசையில்.

ஒன்றையாவது

என் அறையில் நுழைந்த
வண்ணத்துப்பூச்சி
மின் விசிறியில் அடிபடும் முன்
நிறுத்தி விட ஆசை
நகரும் காலத்தையாவது.

November 4, 2007

நுழைய முடியாத தெரு

ஆக்கர் குத்தப்பட்ட தழும்புகளின்றி
தார்த்தோல் போர்த்திய என் தெரு.
மண் வீடுகளின் சவக்குழிகளில்
வளர்ந்திருந்த மாடி மரங்கள்.
வாகனக் காப்பகமாகிப் போன
எதிர்வீட்டு மாட்டுத்தொழுவம்.
சாலை விழுங்கியிருந்த,
வீடுகளின் கடைசிப் படிகள்.
"தூமியக்குடிக்கி", "கண்டாரஓளி"
சப்தங்களின்றி குழாயடி.
புதிய மூக்குகள் அறிந்திராத
காற்றில் காணாத ரைஸ்மில் வாசனை.
தாவும் மணி நாயின் கால்தடங்களற்ற
வெள்ளைச் சட்டையில் நான்.
எத்தனைமுறை நடந்தாலும்
நுழையவே முடியவில்லை
என் பழைய தெருவுக்குள.

November 1, 2007

இன்னொரு வகை

சுடிதாரில் நான் குனியும்
எந்தவொரு கணத்தையும்
தவறவிடாத கழுகுக்கண்கள்.
பேருந்தில்,ஹோட்டலில்,கடைவீதியில்,
இந்த இடம்தான் என்றில்லாது எங்கும்.
தற்செயல் தவிர
மற்ற எல்லா அர்த்தங்களும்
கற்பிக்கப்படும் என் தீண்டலுக்கு.
எல்லா ஆண்களும்
இப்படித்தான் என்றில்லை
இன்னொரு வகையும் உண்டு
-சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள்.

செல்லா(த) செல்

கட்டைவிரல் வலிக்க
விடாது புலம்பும் மனிதர்கள்.
எப்போதும் தொடர்பு எல்லைக்கு
வெளியே இருக்கும் கடவுள்.

October 30, 2007

எழவெடுத்த கவிதை

சிவப்பு விழுவதற்குள்
சிக்னல் கடக்க விரைகையிலும்,
கடைசி முறையாய் முக்கி
கழிவு நீக்கத்தை முடிக்கையிலும்,
சமையல் ருசி பற்றின
மனைவியின் கேள்விக்கு
பதிலளிக்கும் இடைவெளியிலும்,
இரவில்,கலவி மயக்கத்தில்
தொலைந்த நினைவு திரும்பும்
அந்தரங்க நொடியிலும்,
எங்கிருந்து தான் தோன்றுமோ-
எழவெடுத்த கவிதைக்கு
நேரம் காலமே தெரிவதில்லை.

வன்முறை

தடித்த வார்த்தைகளில்
மெல்லிய மெளனங்களில்
பதிலுக்கு செய்யும் வீம்புகளில்
ஒன்றும் செய்யாத விலகலில்
முறைக்கும் பார்வைகளில்
அவைதம் புறக்கணிப்புகளில்
கோபமான தண்டனைகளில்
சாந்தமான மன்னிப்புகளில்
அறையப்பட்ட சிலுவைகளில்
அணிவிக்கும் மாலைகளில்
துருத்திக் கொண்டு தெரிகிறது
ரத்தருசி பிடித்த வன்முறை நாக்கு.

பேச்சு

அடுத்து வரப்போகும் ரயில் பற்றியோ
கடந்து சென்ற ரயில் தந்த வலி பற்றியோ
கொஞ்சமாய் வந்து விழுந்த
குழந்தையின் மலம் பற்றியோ
முழுக்க வருடுகின்ற குளிர்காற்றைப் பற்றியோ
-கேட்பதற்கு யாருமேயில்லை என்றாலும்-
தமக்குள் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கும்
இணை தண்டவாளங்கள்.

நான்கு ஹைகூக்கள்

''நான்கு ஹைகூக்கள்''
என்று தலைப்பெழுதி
முதல் மூன்றுக்கு அப்புறம்
நான்காவதாக
"இன்னும்
எழுதப்படாமலிருக்கும்
ஒரு ஹைகூ"
என்று எழுத ஆசைதான்.
என்ன செய்வது?
முதல் மூன்றும்
இன்னும் முடிந்தபாடில்லை.

கற்பிதம்

"இந்த மேஜை என்ன சொல்கிறது?"
''அந்த மின்விசிறி என்ன சொல்கிறது?"
''காலை உரசிச் செல்லும்
என் பூனைக்குட்டி என்ன சொல்கிறது?"
யோசிப்பில் கிடைத்த பதில்கள்.
''ஒன்றுமே நாங்கள் சொல்லவில்லையே"
-கதறின அவைகளைப் புறந்தள்ளி விட்டு
என் கவிதையைப் பிரசுரிக்க விரைந்தேன்

October 4, 2007

எச்சம்

விழித்துத் தலை உலுக்கியும்
விலகாத கனவுகள்

உதைத்து விரட்டியும்
தொடரும் நிழல்

இறங்கிய பின்னும் தலைக்குள்
சுற்றும் குடை ராட்டினம்

ஒரு வேலையும் செய்யாவிடினும்
ஒட்டிக் கொண்டிருக்கும் தொப்புள்

அஸ்தமனம் ஆனபோதும்
அணைந்திடாத வெளிச்சம்

ஆழச் செருமி உமிழ்ந்தபின்னும்
அடங்கிடாத கமறல்-
திறந்த வாய்ப் பிம்பத்தில்
உள்நாக்காய்ச் சிரிக்கும் முதற்காதல்.

ஒன்றும் செய்வதற்கில்லை

முகத்தில் வந்தறைந்து
விழி சிவக்க மண் வீசி
எடுப்பான கேசத்தை
ஏளனமாய்க் கலைத்து
இடுப்பு வேட்டியை
இழுத்து உருவிட,
ததும்பிய கோபம்
தலைக்கேறிப் போனாலும்,
ஒன்றும் செய்வதற்கில்லை-
குழந்தை,காற்று.

காத்திருத்தல்

பிரக்ஞயாய் வெளிப்படும் தகித்த பெருமூச்சு
குழப்பத்தில் தொங்கியபடி சிறகொடிந்த எண்ணங்கள்
எப்போதோ இழந்துவிட்ட வாய்
ஏளனமாய் வெறிக்கும் வெளி
சலித்துப் போன உணர்வு
என்னையே தின்னத் துவங்க,
கடைசி விள்ளலை விழுங்கும் முன்பாவது வருவாயா?

முரண் முதன்மைகள்

கோப்பை வென்று, நாடு திரும்பும் வீரர்கள்-
ஆயிரம் பூக்கள் மனிதக் கூட்டங்களுடன்.
அடுத்த விமானம்.
எல்லையில் உயிர்நீத்த
வீரனின் சவப்பெட்டி-
வாடிய ஒற்றை ரோஜா தனிமையில்.

பிச்சைப் பொத்தான்

ரயில்டிக்கெட் வாங்கும் கூட்டம்.
அழுக்குப் பாவாடைசிறுமியின்
மடியில் சிரித்தமுகக் குழந்தை,
கிள்ளப்பட்ட வலியில்
உரத்து அழுதது.
அலுமினியத் தட்டில்
விழ ஆரம்பித்தன
சில்லறைக் காசுகள்.

உடையாத குமிழிகள்

உருண்டோடும் வருடங்கள் சின்ன வயது ஞாபகங்களை, பொக்கிஷங்களாக மாற்றி விடுகின்றன. அந்த வயது அறியாமை கூட இப்போது நினைத்துப் பார்க்கையில்,அனுபவித்து ரசிக்கத் தக்கவையாக பரிணாமம் எடுத்து விடுகின்றன. சைக்கிள் விடப் பழகியதும்,நீச்சல் கற்றுக்கொண்டதும்
அப்போதைய எனது சாகசங்கள்.
அப்போது,என் வீட்டில் பாட்டிக்கு மட்டும் தான் நீச்சல் தெரியும்.
"நீச்ச தெரியுமாடா உனக்கு?" என்கிற என் வயதொத்தவர்களின் கேள்விக்கு,"தெரியாது" என்று பதிலளிக்கையில் வெட்கம் பிடுங்கித் தின்னும்.
ஞாயிற்றுக்கிழமையானால், பாட்டி,எல்லாத்துணிகளையும் எடுத்துக் கொண்டு எங்கள் ஊர் (தே.கல்லுப்பட்டி) பஸ்ஸ்டாண்டுக்குப் பின்னால் இருக்கும் தெப்பக்குளத்திற்கு எங்களை கூட்டிச்சென்று,துணிகளைத் துவைத்தபின், கொஞ்ச நேரம் நீச்சல் கற்றுக் கொடுப்பார். என் அருணாக்கயிறை (அரைஞாண் கயிறு) பாட்டி பிடித்துக் கொள்ள, கை,கால்களை உதைத்து வட்டமிடும் ஒரு அரை நிமிட நேரத்திற்குள்
அரை லிட்டர் தண்ணீரை முழுங்கி விட்டிருப்பேன்.
அருணாக்கயிறு அறுந்து ,மூழ்கி விடுவேனோ என்கிற பயத்தினாலும், பாட்டியுடன் தெப்பத்திற்கு போகும் பாக்கியம் எப்போதாவதுதான் கிடைத்ததாலும்,சைக்கிள் டியூபின் உதவியை நாடினேன்.
காற்றடிக்கப்பட்ட சைக்கிள் டியூபை இரண்டாக வளைத்து,
உடம்பில் போட்டுக் கொண்டு தண்ணீரில் மிதப்பேன்.
இவ்வாறு,கல்லுப்பட்டி தெப்பம், தேவன்குறிச்சி(பக்கத்து ஊர்) தெப்பத்தில்
ஓரளவு நீச்சல் பழகிய பின்,எங்கள் ஊர் "சதுரக்கிணற்றில்"
கால்வைக்கும் தைரியம் எனக்கு வந்தது. சதுரக்கிணறு, பெயருக்கு ஏற்ப சச்சதுரமாக இருக்கும். எவ்வளவு ஆழம் என்று யாருக்கும் தெரியாது.
அதிலும், கற்றுக்குட்டிகளான என்னைப் போன்றவர்கள்
உள்ளே இறங்கவே யோசிப்பர்: இதில் எங்கிருந்து முங்கி ஆழம் எல்லாம் பார்ப்பது? "ஒரு பனைமர ஆழம் இருக்கும்" என்று ஊர்ப் பையன்கள் சொல்வார்கள். கிணற்றுக்குள் இறங்கும் படிக்கட்டு கீழ் நோக்கி சென்று, சுவருக்கு சற்று முன்பாகவே முடிந்து விடும்.
கடைசி இரண்டு மூன்று படிகள் இல்லாமல் அந்த மூலை, வட்டமாய், வெறுமையாய் இருக்கும்.இரண்டு,மூன்று பேர் நிற்கும் அளவு மூலையில் இடம் இருக்கும். அதை "பணியாரக்குழி" என்று அழைப்போம்.
கைலி கட்டிக் கொண்டு, ஈரக்கைலியை காற்றுள்ள பலூன் போலக் கட்டிக்கொண்டு பணியாரக்குழிக்குப் பக்கத்திலேயே நீச்சலடிப்பேன்.மற்ற நண்பர்கள் கிணறு முழுவதும் நீந்தி வருவதும், மோட்டார் ரூமிற்கு மேலிருந்து"சொர்க்" அடிப்பதும் எனக்கு ஏக்கப் பெருமூச்செரியும் விஷயங்கள்.அதிகபட்சம் என்னால், கிணற்றின் மேலிருந்து நேராகக் குதிக்கத் தான் தெரியும்.சதுரக்கிணற்றில் நன்கு நீச்சல் பழகிய பின்,சைக்கிள்டியூப்,கைலி உதவியின்றி எங்கு வேண்டுமானாலும் நீச்சலடிக்கும் தைரியம் வந்தது.
முழுப் பரீட்சை லீவுக்கு,பெரியம்மா ஊரான ஒ.கோவில்பட்டிக்குப் போவேன். என் பெரியம்மா மகன் சதீஷ் மற்றும் சில நண்பர்களுடன் சேர்ந்து,
மதிய உணவுக்குப் பிறகு, ஒரு மூன்று மணி நேரம் அந்த ஊரில் இருக்கும் எல்லா கிணறுகளிலும் ஊறிக்கிடப்போம். வேப்பம்பட்டியார் கிணறு, சீனிநாயக்கர் கிணறு என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிணறு।ஒவ்வொரு கிணற்றுக்கும் ஒவ்வொரு விதமான சாமுத்ரிகா லட்சணங்கள். வேப்பம்பட்டியார் கிணறு குறுகலாக வட்டமாக இருக்கும்: அதன் தண்ணீர் கண்ணாடி மாதிரி இருக்கும்.சூரிய வெளிச்சத்தில், கீ..ழே தரையில் கிடக்கும் கற்கள் பளிச்சென்று தெரியும்.சீனிநாயக்கர் கிணறு ஷங்கர் படக் கிணறு போல, மிக பிரம்மாண்டமாக இருக்கும்.கிணற்றுக்கு மேலே, தரை வழியாக கிணற்றை சுற்றி ஓடிவரவே முழுதாக மூன்று நிமிடங்கள் தேவை.இதில் வேறு, "உள்ள முதலை எல்லாம் இருக்குடா" என்று அந்த ஊர்ப் பையன்கள் சொல்கையில்,"ஒரு வேளை இருக்குமோ?" என்கிற சந்தேகம் வயிற்றில் புளியைக் கரைக்கும்.உள்ளே நீந்திக் கொண்டிருக்கையில் காலில் படும் எந்தப் பொருளும் முதலையின் பற்களோ என்கிற கிலியை ஏற்படுத்தும்.
படித்து முடித்து,சென்னைக்கு வேலைக்கு வந்த பின் கிணறு எல்லாம் கிடைக்கவில்லை.சரி,கடல் இருக்கையில் கிணறு எதற்கு? என்று,ஆளில்லாத காந்தி பீச் போய் நண்பர்களுடன் சேர்ந்து அரிதாக எப்பொழுதேனும்ஒரு இரண்டு மணி நேரம்கடலில் ஆட்டம் போட்டு வருவேன்.
இப்பொழுது மும்பையில், இருக்கும் வேலைப்பளுவில் அதெல்லாம் நினைத்துப் பார்க்கவும் முடியாத விஷயங்கள்.
சென்ற வருடம் கல்லுப்பட்டிக்கு சென்றிருந்த போது,கத்தாரில் வேலைபார்க்கும் என் நண்பன் ஜெயக்குமார் விடுமுறையில் வந்து இருந்தான்.வெகு நாள் கழித்து வந்து இருந்ததால்,ஊரின் நிறைய இடங்களை சென்று பார்த்தோம். "வாடா! சதுரக்கிணறு வரைக்கும் ஒரு எட்டு போய்ட்டு வந்துரலாம்டா" என்று அவனை வலுக்கட்டாயமாக அழைத்துப் போனேன்.
சதுரக்கிணறு, சற்று வயதாகி, பொலிவிழந்து காணப்பட்டது.
அதைப் பார்த்தால், இப்போது உள்ள சிறுவர்கள் யாரும் அடிக்கடி போய் நீந்தும் இடம் போலத் தெரியவில்ல. தடுத்து வளர்ந்திருந்த முட்செடிகளை கவனமாக விலக்கி, படிகளில் இறங்கினேன்।பணியாரக்குழிக்கு வெகு கீ॥ழே தூசி படிந்த, கலங்கலான நீர்மட்டம் தென்பட்டது.
அதிகம் பயன்படுத்தாததால் சற்றுப் பாழடைந்து போனசதுரக்கிணறைப் பார்க்க மனதுக்கு என்னவோ போல இருந்தது. "வாடா! போகலாம்" என்கிற ஜெயக்குமாரின் கூவலுக்கு பதில் ஏதும் சொல்லாமல்
கனத்த மனதுடன் வீடு திரும்பினேன்.

விடியற்காலை

புரண்டு படுத்ததால் பூமிப்பந்தின்
முதுகு பார்த்திருந்தவெளிச்சம்
இப்போது முகம் நோக்கி.

விழித்த உடனேயே அன்றைய இருத்தலை
உறுதி செய்து கொள்ளும் ஜீவராசிகள்.

மீண்டும் வெளிச்சக் கண்ணாடி
பொருத்திக்கொண்டஇருள் கண்கள்.

தான் மெளனமாகி,
பிற சப்தங்களை கடத்தும்காற்று.

பொய்கள் சுமக்கும் நாளிதழ்கள்
போலியான வெட்கத்தில் வீட்டு வாசலில்.

அன்றைய காலைக் கடனுக்கான
காத்திருப்பில் நாட்காட்டி.

உறக்கம் கலைந்த எரிச்சலில்
மனிதர்களை எழுப்பும் அலாரம்.

மதயானை

வழிபாட்டுத்தலங்களில் பகைப்புகை.
சிலுவை சுமந்த கிருஷ்ணனும்
குழலூதும் அல்லாவும்
வெண்ணை உண்ணும் கிருஸ்துவும்
நெடி தாளாது விரைந்து வெளியேறினர்.
யாருமில்லை இப்போது அங்கு-
வால் நீங்கா சில மனிதர்களைத் தவிர.

அர்த்தமுள்ள கேள்விகள்.

தரமான சிந்தனைக்கு அடையாளம்-கேள்விகள் கேட்பது தான்.
கேள்விகள் நமது சிந்தனையைத் தூண்டுகின்றன.
நமது கருத்துக்கள் சரியா,தவறா என்று இனம் கண்டறிய உதவுகின்றன.
சில கேள்விகள் நமது வாழ்வையே புரட்டிப் போடும் வல்லமை கொண்டவை.நம் வாழ்வில் வரும் எல்லா கேள்விகளுக்கும் நமக்கு விடை தெரியும்(தெரியாவிட்டால் இன்னும் சரியாக முயற்சிக்கவில்லை என்று அர்த்தம்)
நீங்கள் ஒரு அரசியல்வாதியாகவோ அல்லது திருடனாகவோ (அல்லது இரண்டும் சேர்ந்தவராகவோ) இல்லை என்றால்,தாராளமாக உங்களை எல்லா கேள்விகளையும் கேட்டுக் கொள்ளுங்கள்.இது போன்ற கேள்விகளை கேட்பதால் கிடைக்கும் நன்மைகளை விட,அவைகளை கேட்காமல் போவதால் அதற்கு நாம் கொடுக்கும் விலை மிக அதிகம்.

கீழ்காணும் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்।இவைகள் எந்த அடிப்படையிலும் வரிசைப்படுத்தப்படாதவை.ஆரம்பத்தில் இவைகளுக்கான உங்களின் பதில்கள் மேம்போக்காகப் பட்டாலும்,மீண்டும்,மீண்டும் கேட்கப்படுகையில் அவை அர்த்தம் பொதிந்த பதில்களை கொடுக்கின்றன.

What do I want to achieve with my life?
What should I want?What matters to me at this time in my life?
Why do I want what I want?Does it really matter?
Who am I living my life for?What don't I know?
What do I not question about myself?
What can I learn from this?
What are my plans for the next year?
What support do I need in order to ...?
Who can help me?How ambitious am I these days?
Am I still learning and growing?
What needs my attention today/this week/this month/ this year?
If i died tomorrow,whatwould be missing from my obituary that I would like to see there?
What can I do about it?What am I afraid of losing?
What am I afraid of gaining?
What would I like to overhear people saying about me?
What would I not like to hear said about me?
Why is my best friend my best friend?
Would winning the lottery be a blessing or a curse?
What would I do if I knew I could not fail?
Is that all there is to this?
How do I know this to be true?
In what way am I causing or reinforcing this behaviour?
If I had a year to live,what would I do with the time?
How do I feel when I get up in the morning?
When have i felt most alive?
Does my reputation work for or against me?
What would I like to be able to do in one year's time that I can't currently do?
Or five years from now?Ten years? Twenty years? Fifty years?
What action can I take rather than worrying?
What am I prepared to give up in order to ...?
What is the best outcome in this situation? And the worst?
What could affect my plans?
What do I need to do to make sure that I get what I want?
What do I need to find out before I go any further?
Why not?
What is the best thing I've done in the last year and why?
What aspects of my life do I enjoy the most? And the least?
What could other people learn from me?

ம்.எப்படி உணர்கிறீர்கள்?
மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலை எழுதி வைத்துப் படிக்கவும்-முடிந்தால் வாய் விட்டு.அப்போதுதான் நாம் எந்த அளவுக்கு நமக்கு நாமே உண்மையுள்ளவர்களாக (அல்லது இல்லாதவர்களாக)இருக்கிறோம் என்பது புலப்படும்.

மேலும்,இந்த கேள்விகளோடு,கிளைக் கேள்விகளையும் கேட்கையில்,(Eg: "Can you be more specific?"or "Do you have anything else to say on this subject?") அவை இன்னும் அதிக பயனுள்ள பதில்களை தரும்.
நினைவிருக்கட்டும்:மோசமான பதில்கள் இருக்கலாம்;ஆனால்,மோசமான கேள்விகள் என்று எதுவும் இல்லை.நம்மை நாம் கேட்கவில்லை என்றால், வேறு யாரும் நம்மைக் கேட்கப்போவதில்லை.என்ன? சரிதானா நான் கேட்பது?


(John Middleton எழுதிய Upgrade Your Brain என்னும் புத்தகத்தின் உதவியுடன்...)

Xpress

காத்திருப்புகளுக்குப் பின்
அதிவேக முத்தங்கள்;
உச்சக்கட்டம் நிகழும் முன்பே
துரிதமாய் விலகி விட...
தண்டவாளம் மட்டும்
தனியே,விரகத்தில்.

கோவில் திருவிழா


"நன்றாக உடைய வேண்டுமே"
தேங்காய்க் கூடையுடன்
பயம் கலந்த பக்தியில் பெண்கள்।

சின்னவயது பள்ளித்தோழிகளை
பார்வையால் தேடும் இளசுகள்।

அழும் குழந்தைக்கு அருகிலேயே
வந்து விற்கும் பலூன்காரன்।

வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளுடன்
சுற்றும் ராட்டினத்தில் சிறுவர்கள்।

திருவிழாவைவிட புதுப்பாவாடை தந்த
குதூகலத்தில் சிறுமிகள்।

கோவில் மணி ஓசையையும்,
சிலரது சாராய நெடியையும்
பாரபட்சமின்றி சுமந்து திரியும் காற்று।

புதிதாய் முளைத்த வெளிச்சத்தில்
சற்றே கலவர முகத்துடன் இருள்

எப்போதும் போல் எதுவும் பேசாமல்
மெளனமாய் அமர்ந்திருக்கும் சாமி।

பயணம்

இது...
ஜன்னல் வழி உலகின் என் பார்வைப் பதிவுகள்
உள்ளக் கரையில் எண்ண அலைகள் தரும் அதிர்வுகள்
பயணத் தேடலுக்கான என் ஆட்காட்டி விரல் பதில்
பல்சுவை கருத்தினை எடுத்துரைப்பேன் இதில்
தத்தித் தவழ் மழலையின் விரல் பிடிக்கா முதல் நடை
தனக்குள்ளே எழுகின்ற வினாக்களின் பல விடை
வானம் தொட, நான் ஏறும் என்னாலான ஒரு ஏணி
வாழ்வுத் தோட்டத்தில் உதிக்கும் வலைப்பூக்கள் இனி
வழிப்போக்கர்கள் அனைவரும் வருக வருக
இடித்துரைப்பு, பெரு ஊக்கம் எல்லாம் தருக
இளைப்பாறல்,பயணித்தல் இரண்டும் நிகழும் ஒரு விந்தை இடம்
தலை பாரம் இறக்கிட தன் முனைப்பு வெல்லும் உலக சந்தை இடம்
கடந்து போக வேண்டும் இன்னும் பல காத தூரம்
நான் கொடுத்த வாக்குகள் பல உண்டு காப்பதற்கு
கடந்து போக வேண்டும் இன்னும் பல காத தூரம்.

August 17, 2007

Enna? Enge? Eppothu?

En Manathitkul irundha , Irukum Kelvikalin Velipaadu... Enathu Indha Puthiya Muyatchi enru sollalaam!
Anbudan,
Prakash.