December 25, 2010
முத்தாலம்மன் பொங்கல்
காடனேரி,கிளாங்குளம்,சத்திரப்பட்டி)ஆறு சப்பரங்கள் செய்து முத்தாலம்மனை அம்மாபட்டியிலிருந்து அவரவர் ஊருக்கு அழைத்துச் சென்று வழிபடுவர்.பொங்கலுக்கு இரு நாட்களுக்கு முன்பே சென்று விட்டதால், முந்தின இரவு, சுத்துப் பட்டி கிராமங்களுக்கு சென்று அவர்கள் சப்பரம் செய்வதையெல்லாம் பார்த்து விட்டு வந்தோம்.
கல்லுப்பட்டி சப்பரம் வழக்கம்போல அளவில் பெரியதாக இருந்தது.
அமைப்பிலும்,அழகியல் வேலைப்பாடுகளிலும் வன்னிவேலம்பட்டி சப்பரம் மிக நன்றாக இருந்தது.மற்ற சப்பரங்களை மிக சிரமப்பட்டுத் தூக்கிச் செல்கையில், வன்னிவேலம்பட்டி சப்பரந்தூக்கிகள் அனாயாசமாகத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக சென்றனர்.
தேவன்குறிச்சி சப்பரம் ஏறக்குறைய முக்கால் பங்கு ஒருபுறம் கீழே சாய்ந்து, மீண்டும் நேர் நிலைக்கு வந்த அந்த சில நொடிகள் நெஞ்சுக்குள் பக் பக்.
இந்த முறை , கையில் காப்புக் கயிறு கட்டிக் கொண்டு விரதமிருந்தவர்கள் மட்டுமே சப்பரந்தூக்க அனுமதிக்கப் பட்டார்களாம்.
அம்மனை தரிசிக்க வழக்கம்போல முண்டியடிக்கும் கூட்டத்தில்,இரண்டு மணிநேரம் காத்திருக்காமல் ஐந்து நிமிடத்திலேயே தரிசனம் செய்யமுடிந்தது. விடாது வந்த மழைக்கும், மறுநாளைய தீபாவளிக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்.
அம்மாபட்டிக்கு சென்று அவரவர் கிராம முத்தாலம்மனை அழைத்து வந்து அன்று முழுவதும் வழிபட்டனர். அன்றிரவே அம்மனை சிறப்பு வழிபாடுகள் செய்து, சோறு ஊட்டி, ஊருக்குத் தொலைவில் இருக்கும் ஓடைக்கரையில் சுக்கு நூறாக உடைத்துக் கரைத்தனர். எப்போதும் போல, அம்மன் உடைப்பு நிகழ்வு நடக்க ஆரம்பிக்கையிலேயே சொல்லி வைத்தாற் போல மழை பெய்ய ஆரம்பித்தது அற்புத நிகழ்வாக இருந்தது.
இந்த முறை பொங்கல் வைக்கும் நாள் முடிவுசெய்யக் குறி கேட்கையில் அம்மனின் உத்தரவுகள் அவ்வளவு தெளிவாகக் கிடைக்கவில்லையாம். இருந்தாலும் சமரசங்களுடன் பொங்கல் தினத்தை முடிவு செய்து,ஏற்பாடுகளைத் தொடர ஆரம்பித்தனர். அதனால் தானோ என்னவோ, இந்த முறை சில சிக்கல்கள் ஏற்பட்டன.
கல்லுப்பட்டி சப்பரம் நிலையிலிருந்து வெளியே வந்தவுடன் அதைத் தாங்கிப் பிடிக்க வைக்கப் படும் தண்டக் கம்புகள் உடைந்து விட, அது சரி செய்யப் பட்டு, ஒரு மணி நேரத் தாமதத்தில் அம்மாபட்டி பயணத்துக்குக் கிளம்பியது.
வயற்காட்டில் முழங்கால் அளவு சேற்றில் தூக்கிக் கொண்டு வரப்படும் சத்திரப்பட்டி சப்பரத்திற்கும் இதே போன்ற பிரச்சனை ஏற்பட்டது.
அம்மாபட்டியிலிருந்து அம்மனை வெளியே தூக்கிக் கொண்டு வருகையில் ஒரு அம்மனின் சிம்ம வாகனமும்,திருவாச்சியும் உடைந்து விட, அதை சரி செய்துவிட்டு அம்மனைத் தூக்கிச் சென்றனர்.
இத்தனை பிரச்னைகளுக்கும் இடையேயும் யாருக்கும் பெரிதாக எந்த சேதமும் இல்லாமல் அம்மன் அருளால் முத்தாலம்மன் பொங்கல் இனிதே நிறைவடைந்தது.பின்னர் பரிகார பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டு நிவர்த்தி செய்தனர்.
இனி அடுத்த முத்தாலம்மன் பொங்கல் நவம்பர் 2012 இல்.
முத்தாலம்மன் பொங்கல் குறித்த மேலதிக விபரங்களுக்கு அதற்கென்றே துவக்கப்பட்டுள்ள கீழ்கண்ட இணையதளத்தை பார்க்கவும்.
http://www.muthalammanpongal.blogspot.com/
புகைப்படங்கள்: ராகா.
Posted by
பிரகாஷ்
at
3:39 PM
2
comments
Labels: Kallupatti, Muthalamman Pongal, ஊர்சாத்திரை பொங்கல், முத்தாலம்மன் பொங்கல்
February 21, 2010
பறவைகளுடன் ஒரு பொழுது...
நூற்றுக் கணக்கான அழகான பறவைகள் புடைசூழ இருந்த அனுபவம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா?போன வாரம் ரங்கன் திட்டு பறவைகள் சரணாலயம் சென்றபோது இதை அனுபவித்தேன்.
அழகழகாய்,குச்சிக் குச்சிக் கால்களுடன் விதவிதமான வண்ணங்களை தங்கள் இறக்கைகளிலும்,பின்புறத்திலும் பூசிக் கொண்ட சில...
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்கப் பொறுமையின்றி ஸ்பூன் போன்ற நீண்ட அலகுடன், மீன்களை கவ்விப்பிடிப்பதில் பிஸியாய் சில..
மரங்களில் அமர்ந்து தம் இறகுகளை அலகால் குடைந்து சீவிக்கொண்டு சில...
வெள்ளைப் பஞ்சுமிட்டாயை பின்னால் செருகி கொண்டவை போல புஸு
புஸுன்றிருந்த வெள்ளை வால் இறக்கைகளுடன் சில.
திடீரென்று ஏதோ தோன்றியது போல மெல்ல விர்ரிட்டு,தண்ணீர் மட்டத்திற்கு சற்று மேலே, சிலசமயம் கால்கள் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு உயரப் பறக்கும் சில (நாங்களும் தவளை விடுவோம்ல!)
நம் கேமராவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டு வண்ணமயமான அகன்ற இறக்கைகளை அழகாகக் காண்பித்த வண்ணம் சில.. (காசா பணமா,இந்தா இன்னொன்னு எடுத்துக்க!)
நம் இருப்பையே கவனிக்காத மாதிரி அவைகளுக்குள் பேசிக்கொண்டு சில..(ஏய். அந்த ஏரியால நிறைய மீன்கள் இருக்கு)
கடந்து செல்லும் எங்களை அனிச்சையாய்த்திரும்பிப் பார்த்து, மீண்டும் தன் வேலையை மும்முரமாய்த் தொடரும் சில..(வந்துட்டாங்கய்யா!)
ரங்கன் திட்டு பறவைகள் சரணாலயம் மைசூருக்கு செல்லும் வழியில் ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு வடக்கே 10கி.மீ தொலைவில் உள்ளது.
0.65 ச.கி.மீ சுற்றளவே உள்ள இந்தக் குட்டி சரணாலயம் ஆறு சின்னஞ்சிறு தீவுகளால் ஆனது.
காவிரியில் அணை கட்டும் போது உருவான இந்தத் தீவுகள் பறவைகள் வந்தமரும் அருமையான வாசஸ்தலமாக இருந்த்தைப் பார்த்த உலகப்புகழ் பெற்ற பறவையியல் நிபுணர் டாக்டர்.சலீம் அலி 1940 –இல்,அன்றைய மைசூர் மகாராஜாவிடம் இதைப் பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்திப் பாதுகாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அப்போது முதல், நூற்றுக்கணக்கில் cormorants, darters, white ibis, spoon billed storks, open billed storks, painted storks, white necked storks, egrets, herons, terns, swallows, kingfishers, sandpiper போன்ற பறவை இனங்களின் வாசஸ்தலமாக ஆனது ரங்கன் திட்டு.
நாங்கள் குடும்ப சகிதமாய் அதிகாலை 4.30 மணிக்கு பெங்களூரிலிருந்து கிளம்பி 7.30 மணிக்கு ஸ்ரீரங்கப் பட்டணம் போய்ச்சேர்ந்தோம்.ஸ்ரீரங்கநாதரை தரிசித்து விட்டு, ரங்கன்திட்டு செல்கையில் 10 மணி ஆகிவிட்ட்து.(இடையில் அங்கே இருந்த ஒரே ஹோட்டலில் இட்லியும் தோசையும் சாப்பிட்டோம்.(ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் –அதில் எது அதிகக் கொடுமையானது என்று.)- இந்த ஏரியாவில இதுக்கு மேல ஒண்ணும் எதிர்பார்க்காதீங்க என்றார் என் மைத்துனர் பாலாஜி.
(அவருக்கு இதுபோன்ற இடங்களெல்லாம் தண்ணி பட்ட பாடு. சனி ஞாயிறு என்றால், தனது எஸ்.எல்.ஆர் கேமராவைத் தூக்கிக் கொண்டு மலை, ஆறு, சுற்றுலா இடங்கள் என்று கிளம்பி விடுவார்.)
தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு பெண்கள் கல்லூரி ஆசிரியை அங்கிருந்த மாணவிகளை “ம் சீக்கிரம் சீக்கிரம்.. இன்னும் நிறைய இடத்துக்குப் போகணும்” என்று விரட்டிக் கொண்டிருந்தார்.இட்லியை முழுங்கவும் முடியாமல், பசியால் பாதியில் எழவும் முடியாமல் பாவம்...மாட்டிக்கொண்ட மாணவிகள்.
பச்சைப்பசேலென்ற நெல் வயல்கள்,நாற்று நட்டுக்கொண்டிருக்கும் விவசாயிகள், வீட்டுக்கு இரண்டாய் மரங்களில் கட்டப்பட்ட காளை மாடுகள் எல்லாவற்றையும் கடந்து பத்து நிமிட்த்திற்குள் ரங்கன் திட்டு சென்று விட்டோம்.
சுற்றிலும் மூங்கில்,அகேசியா, யூகலிப்டஸ் மற்றும் பல்வகை மரங்கள் புல்வெளிகளுடன் மிக அழகான இடமாக இருந்த்து ரங்கன்திட்டு. பூங்காவில் இருந்த நீர்த் தேக்கங்களில் மலர்ந்து,செக்கச்செவேலென்று இருந்த அல்லிப் பூக்கள் கொள்ளை அழகு.
ரங்கந்திட்டில் பறவைகளை அருகில் சென்று ரசிக்க படகு சவாரி அருமையான வழி
ஒவ்வொருவர் ஏறியபோதும் பாரத்தால் இருபுறமும் அலைக்கழிந்தது படகு.
வெயில் அதிகமாக இருந்தபடியால் கைகளை ஆற்றுநீரில் அழாவிக் கொண்டிருக்கையில், ”கைய உள்ள விடாதீங்க, முதலைங்க இருக்குது” என்று பீதியைக் கிளப்பினார் பாலாஜி.
சிறிது தூரப் பயணத்திலேயே அவர் சொன்னது போல காவிரியில் வளமாகக் கிடைக்கும் மீன்களைத் தின்று கொழுத்த முதலைகள் பாறையோரம் அசையாது கிடந்தன.அதனருகிலும் பாதுகாப்பான இடைவெளியில் பறவைகள் நின்று கொண்டு.
கூட்டம் கூட்டமாய்ப் பறவைகள்,மரம் முழுவதும் தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்கள்,குறுக்கும் நெடுக்குமாய் காற்றைக் கிழித்துக் கொண்டு கடந்து செல்லும் பறவைகள் என்று எல்லாவற்றையும் ரசித்தோம்.
பதினைந்து நிமிடங்களில் கரைக்குத் திரும்பியபோது இன்னொருமுறை போகவேண்டும் என்கிற ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
10 மணிக்கு மேல் ஆனபடியால், அந்த சனிக்கிழமை காலை சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகமாக இருந்தது.
பறவைகளை மனமின்றிப் பிரிந்து,திப்பு சுல்தான் கோடைகாலத்தில் தங்க உருவாக்கியிருந்த ஓய்வு மாளிகையை சுற்றிப்பார்த்தோம்.அவ்ர் பயன்படுத்தியிருந்த ஆடைகள், வாள்கள்,துப்பாக்கிகள் (பிஸ்டல் சைசில் இருந்து பின்லேடனை இங்கிருந்தே குறிபார்த்து சுடுமளவு நீ....ளமான துப்பாக்கிகள் வரை) ஆஜானுபாகுவாய் முப்பரிமாணத்தில் வரையப்பட்ட திப்புவின் ஓவியத்தை அந்த மண்டபத்தில் நாம் எங்கிருந்து எந்தக் கோணத்தில் பார்த்தாலும், திப்புவின் விழிகள் நம்மையே முறைப்பது கொஞ்சம் திகிலாகத் தான் இருந்தது.
பிப்ரவரியிலேயே ஆரம்பித்து விட்ட வெயிலை அங்கலாய்த்துக் கொண்டே, அருகிலுள்ள பல்மூரி அணைக்கு வந்து ஒருமணி நேரம் அருமையான நீச்சல் குளியல் போட்டோம்.
அங்கே,எட்டடி நீளக் கூந்தலை அவிழ்த்து, காவேரியில் சுத்தம் செய்து கொண்டிருந்த ஒரு சாமியாருடன் ஒரு போட்டோ செஷன்.
புகைப்படங்கள் எடுத்ததும் போஸ் கொடுப்பதும் ராகா (எ) பாலாஜி
பின்,நிமிஷாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு மைசூருக்கு வந்து, அரண்மனையின் முன் சம்பிரதாயப் போட்டோக்கள் எடுத்து விட்டு,சாமுண்டி கோவில் சென்று விட்டு, வரும்வழியில்,மரபை மீறமுடியாமல்,சில ஊசி,பாசிக் கடைகளுக்கு சென்று வாங்கி விட்டு பெங்களூருக்கு வண்டியைத் திருப்பினோம்.
அடுத்தமுறை ரங்கன் திட்டுக்குப் போகும்போது விடியற்காலையில் அங்கே இருந்தால் பறவைகள் தூங்கி சோம்பல் முறிக்கும் அழகில் இருந்து எல்லாவற்றையும் அமைதியாகக் கண்டு ரசிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.அப்புறம் இன்னொன்று-மறக்காமல் கட்டுசாதம் எடுத்து செல்லவேண்டும்.
Posted by
பிரகாஷ்
at
5:24 PM
10
comments
Labels: சுற்றுலா, பறவைகள் சரணாலயம், ரங்கன் திட்டு
February 16, 2010
பிள்ளையாருக்கு ஓகே. நமக்கு?
ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு, அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில்,ஹெப்பால் மேம்பாலத்திற்கு சற்று முன்பு எம்.இ.எஸ்.சாலையில் ஒரு விபத்து.மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர்,இண்டிகாவால் மோதப்பட்டு கீழே விழுந்து கிடந்தார்.
மற்ற வாகனங்கள் சாலையின் ஓரமாக அந்த இடத்தைக் கடந்து கொண்டிருக்கையில் ஆட்டோ, ஆட்டோ என்று அனைவரும் சத்தமிட்டு, அந்தப் பக்கம் சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தினோம். மனிதாபிமானம் மிக்க ஒருவர், அவரை அப்படியே அள்ளித் தூக்கிக் கொண்டு ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்கு விரைந்தார். விபத்து நடந்த இடத்தைப் பார்த்தேன். அவர் அணிந்திருந்த ஹெல்மெட் பத்தடி தூரம் தள்ளி கீழே விழுந்து கிடந்தது.
அது சைக்கிளில் செல்பவர்கள் உபயோகிக்கும் சாதாரண லேசான ஹெல்மெட். (பார்க்க: படம்)
பெங்களூர் சாலைகளில் இதை அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களை நீங்கள் அடிக்கடி பார்க்கலாம். இதுபோன்ற ஹெல்மெட் ,விபத்து நேரிட்டால், தலையில் விழும் அடியை அது எந்த விதத்திலும் தடுக்காது.
அவர் பிழைத்தாரா, இல்லையா என்கிற கேள்விக்கு பதில் தெரியாமல், இதை எழுதும் இந்த நேரத்தில் ,ரத்த இழப்பு அதிகமாகி அவர் உயிர் பிரிந்திருப்பின், அதற்கு முழுக்காரணமும், அவரது தலையில் ஏற்பட்டிருந்த பலமான அடியும், அதைத் தடுக்கமுடியாத அந்த லேசான ஹெல்மெட்டுமே காரணம்.
ஒரு ஆய்வின் படி,
ஹெல்மெட் அணியாதவர்கள் ஹெல்மெட் அணிபவர்களை விட 14 மடங்கு அதிகம் உயிர்போகும் விபத்துக்கு ஆளாகிறார்கள்.
80-85 சதவீத அபாயகரமான தலை மற்றும் மூளைக் காயங்களை ஹெல்மெட் அணிவதால் தடுக்கலாம்.
90 சதவீத மோட்டார் சைக்கிள் விபத்து சாவுகள் ஹெல்மெட் அணியாததால் தான் ஏற்படுகின்றன.
சரி. யாரை ஏமாற்ற இந்த மாதிரி ஹெல்மெட்டை அணிகிறோம்?
ஏமாறுவது என்னவோ நாம் தான்.
ஐ.எஸ்.ஓ தரச்சான்று உள்ள ,ஃபைபர் அல்லது பாலிகார்பனால் செய்யப்பட்ட நல்ல தரமான ஹெல்மெட்டாய் வாங்கவும். அதுதான் விபத்து ஏதேனும் நடந்தால் நம் தலையை பாதுகாத்து நம் உயிர் காக்கும்.சாலையோரம் விற்கும் மலிவு விலை பிளாஸ்டிக் ஹெல்மெட்கள்,விபத்தின்போது உடைந்துபோவதுடன்,முகத்தில் குத்தி, காயத்தை மேலும் அதிகமாக்கும்.
ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தும் இந்த விளம்பரம் மிகவும் பொறுத்தமானதே.
Posted by
பிரகாஷ்
at
8:59 PM
3
comments
Labels: பயணப் பாதுகாப்பு, ஹெல்மெட்
February 10, 2010
அதிக ஆயுளுக்கு அளவான கலோரி
கலோரி குறைவான உணவு வகைகள் (சேர்க்க வேண்டியன) | கலோரி அதிகமான உணவு வகைகள் (தவிர்க்க வேண்டியன) |
வேகவைத்த காய்கறிகள் | ஐஸ்க்ரீம் |
சாலட்,வெள்ளரி ராய்த்தா | பக்கோடா, வறுத்தமுந்திரி |
இட்லி முதலான வேக வைத்த உணவு வகைகள் | சிக்கன் கறி, மட்டன் கட்லெட், பொறித்த மீன் |
கொழுப்பு நீக்கப் பட்ட பால், தயிர் | ப்ரென்ச் ஃபிரை,நான்,பூரி, நெய்ரோஸ்ட் |
எண்ணைய் குறைவான சப்பாத்தி | புலவ்,பிரியானி,வடை,சமோசா |
சாதம்,வேகவைத்த உருளைக்கிழங்கு | தேங்காய் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்கள் |
கிளியர் சூப்,உப்புமா | ஜிலேபி,குலோப்ஜாமூன் |
வெஜிடபிள் சாண்ட்விச் | மசாலா தோசை,நெய்ரோஸ்ட் |
வேகவைத்த நூடுல்ஸ் | ரவா ஹல்வா,கேரட் ஹல்வா |
ஒயின்,பியர் |
எனவே, அளவான கலோரி சாப்பிட்டீங்கன்னா, அதிக வருடங்கள் உயிர்வாழ்வது மட்டுமில்லாம, வயதாவதையும் தள்ளிப்போடலாம்.
Posted by
பிரகாஷ்
at
12:27 AM
0
comments
Labels: ஆரோக்கியம், உடல்நலம்
January 10, 2010
மீண்டும்...
கயாஸ் தியரியோ, கடவுளின் அருளோ கல்யாணம் ஆகி நல்லபடியாக இருக்கிறோம். “ஏகப்பட்ட வேலைப்பளு, அதனால் தான் எதுவுமே எழுத நேரமில்லை”என்றெல்லாம் ரீல் சுற்ற மாட்டேன். சோம்பேறித்தனமும், முக்கியத்துவம் தராததுமே என் சும்மா இருத்தலுக்குக் காரணம்.
நியூ இயர் ரிசல்யூசன்களில் ஒன்றான, ப்ளாகை அடிக்கடி வந்து எட்டிப்பார்த்து விட்டு, எதையாவது உருப்படியாக எழுதவேண்டும் என்பதை செயல்படுத்த ஆரம்பித்ததால் ,இந்த மீண்டும்...
இனிமேல் உங்க பாடு திண்டாட்டம்தான். :))
Posted by
பிரகாஷ்
at
5:45 PM
0
comments
June 29, 2008
கல்யாணமும் கயாஸ் தியரியும்

"வயசாயிட்டே இருக்கு. சீக்கிரம் ஒரு நல்ல பொண்ணா பாத்துக் கல்யாணம் பண்ணிக்க" என்று என்னிடம் சொல்பவர்களின் எண்ணிக்கை
அதிகமாகிக் கொண்டே இருந்ததாலும்,எனக்கே கொஞ்சம் லேட்டாக உறைக்க ஆரம்பித்ததாலும் என் கல்யாணத்திற்குப் பெண் தேடும்
முயற்சியில் இறங்கினேன்.
"பொண்ணா கிடைக்கலே! பையன்கள் கிடைக்குறதுதான் குதிரக் கொம்பா இருக்கு" என்கிறவர்களின் பேச்சால் சீக்கிரம் பெண் கிடைத்து விடுவாள்
என்று அசாத்திய நம்பிக்கையுடன் இருந்தேன்.சில மாதங்கள் கழித்தே என் நம்பிக்கை "குருடு" என்பது தெரிய வந்தது.
என் வீட்டில் ஜோதிடத்தின் மேல் அவ்வளவு எல்லாம் நம்பிக்கை கிடையாது.இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே எங்கள் ஜாதகங்களை
எங்கள் ஆஸ்தான ஜோதிடரும்,உறவினருமான திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் காண்பித்துப் பலன் கேட்பர்.
மற்றபடிக்கு,வாரத்துக்கு இரண்டு முறை ஏதேனும் தம்ளர் அல்லது பாத்திரங்கள் இடம் மாறி வைத்துக் காணோம் என்றால்
அது கிடைக்குமா,கிடக்காதா? அது வீட்டிற்கு உள்ளேயே இருக்கிறதா? எந்தத் திசையில் இருக்கிறது? என்றும்,அவ்வப்போது வரும் முழங்கால் வலி ஏன் வருகிறது? அது
முழுவதுமாக எப்போது குணமாகும் என்பதற்கு மட்டும் ஜாதகம் பார்ப்பார்கள்.
ஏழுகடல் தாண்டி,ஏழு மலைதாண்டி என்று சின்ன வயதில் படித்திருப்பீர்களே! கல்யாணம் என்பது அது போல.
எனக்கு ஏற்ற மணப்பெண் கன்னட மாத்வ குலத்தில்,காசியப கோத்திரம் அல்லாத வேறு கோத்திரத்தில் பிறந்தவளாகவும்,என் நட்சத்திரத்திற்குப் பொருந்தக்கூடிய 12 நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் பிறந்திருப்பவளாகவும்,
அதையெல்லாம் தாண்டி,ஜாதகப் பொருத்தத்தில் பத்துக்கு ஏழு பொருத்தமேனும் உள்ளவளாகவும் இருக்க வேண்டும்.(குறிப்பாக நான் மிகவும் வலியுறுத்தும் "தமிழ் தெரிந்த" பெண்ணாக இருத்தல் மிக அவசியம்)அப்போது தான் அடுத்த கட்டமாக பெண்ணின் போட்டோவைக் கேட்டு,அது பரஸ்பரம்
பிடித்திருந்தால் நேரில் சென்று பெண்பார்க்க முடியும்.
தினமலர் மணமாலைப் பகுதியில் இலவச விளம்பரம் வெளியிட்டதில் ஒன்றிரண்டு ஜாதகங்கள் வந்தன.
இனி மளமள வென்று எல்லாம் நடந்தேறி விடும் என்றிருந்தேன்.ஆனால், ஜாதகப் பொருத்தம் என்னும் விஷயத்தால் இதோ அதோ என்று
இழுத்தடித்துக் கொண்டே போனது.வீட்டில் பெரியவர்கள் முயற்சிப்பது ஒரு புறம் தொடருட்டும்:
நாமும் முயற்சிக்கலாம் என்று இண்டர்நெட்டில் புற்றீசல்கள் போல முளைத்திருக்கும் கல்யாணத்தளங்களான சாதீ.காம்,பாரத்மேட்ரிமோனி.காம்,
ஜீவன்சாதி.காம்,கே.எம்.மேட்ரிமோனி.காம்,பரிவர்த்தன்.காம் என்று எல்லா தளங்களிலும் என் ப்ரொஃபைலை இட்டேன்.
இவைகளில் உள்ளாடை சைஸ் தவிர மீதி என்னைப் பற்றின அத்தனை விபரங்களையும் கேட்கிறார்கள்.
எப்படியாவது கல்யாணம் நடந்தால் சரி என்று என்னைப் பற்றின அத்தனை விபரங்களையும் கொடுத்தேன் - போட்டோ உட்பட.
அதே தளங்களில் என்னைப் போன்று இட்டிருந்த பெண்களின் ப்ரொஃபைல்களுல் எனக்குப் பிடித்ததைத் தேடி என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.
கொஞ்ச நாட்களாகியும் ஒன்றும் பதில் வரக்காணோமே என்று மீண்டும் என் ப்ரொஃபைலை சரி பார்த்ததில் "பார்ட்னர் ப்ரிஃபரன்ஸ்" என்றிருந்த,
என் வருங்கால மனைவி பற்றிய என் எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்யாமல் விட்டிருந்தது தெரிய வந்தது.சரி என்று அதையும் முடித்து வைத்தேன்.
குருவி உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாய் சில பதில்களும்,புதிய விருப்பங்களும் என் இன்பாக்ஸிற்கு வர ஆரம்பித்தன.லவ்லி ரோஸ்,மீட்ரூபி,
நேச்சுரல்பியூட்டி,ஸ்வீட்டி இவைகள் எல்லாம் எனக்கு விருப்பம் தெரிவித்திருந்த பெண்களின் ப்ரொஃபைல் பெயர்களில் ஒரு சில.
நான் விருப்பம் தெரிவித்திருந்த பெண்கள் சிலபேர் என் விருப்பத்தை ஏற்றுக் கொண்டிருந்தனர்.சரி அவர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று பார்த்தால்
சந்தா கட்டியிருப்பவர்கள் மட்டுமே அடுத்தவரது முகவரியையோ,தொலைபேசி எண்ணையோ பார்க்க முடியும் என்கிற விஷயம் தெரிய வந்தது.
அவர்களாவது என் விலாசம் பார்த்து என்னைத் தொடர்பு கொள்வார்கள் என்று சில வாரங்கள் காத்திருந்தேன். ம்ஹூம். என்னைப் போன்றே
அவர்களும் இலவச சந்தாதாரர்களாய் விருப்பம் தெரிவித்த எதிர்பாலினத்தவரின் போட்டோவையும்,மானிட்டரையும் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பார்கள் போலும்.
போனால் போகிறது என்று ஆறு மாத சந்தாவிற்கு என்று இரண்டு தளங்களுக்கு பணம் செலுத்தி என்னை அப்கிரேடு செய்து கொண்டேன்.
அதன் பின் எல்லோரது முகவரியையும் பார்த்து தகுந்த பெண்ணைத் தேர்ந்தெடுக்கலாம் என்றிருந்தவன் நினைப்பில் விழுந்தது மண்.
நிறையப் பெண்கள் தங்களது போட்டோ,தொடர்பு விபரங்களைப் பாஸ்வேர்டு கொடுத்துத் திண்டுக்கல்பூட்டு போட்டுப் பூட்டி வத்திருந்தார்கள்.
அவர்களது விருப்பம் இருந்தால் தான் நான் அவைகளைப் பார்க்க முடியும் என்கிற நிலை.
ஒரு ஞாயிறு காலையில் உமா என்ற பெண்ணிடம் இருந்து பாஸ்வேர்டு எனக்கு வந்திருந்தது.பாஸ்வேர்டை உபயோகித்து
அவரது போட்டோவைப் பார்த்து அதிர்ந்து போனேன். மானிட்டர் கொள்ளாத அளவு ஃபோட்டோவில் பெரிய உடல்வாகு.என்னை விட இருபது கிலோ எடை கூட.
சுமோ என்று பெயரிருந்திருந்தால் பொருத்தமாக இருக்கும்.
சரி அந்த லவ்லி ரோஸ் என்னவாயிற்று என்று போய்ப் பார்த்தால் அந்தப் ப்ரொஃபைல் நீக்கப்பட்டிருந்தது.நான் பார்த்து வைத்திருந்த ரோஸை
யாரோ பறித்துச்சென்று விட்டார்கள்.கல்யாணம் ஆகி விட்டிருக்கும் போல.
பரிவர்த்தன்.காம் இல் ஒரு நூற்றைம்பது பெண்களின் விபரங்களை அலசி,அதில் பொருத்தமாக உள்ள ஐந்தாறுக்கு என் விபரங்களை அனுப்பி வைத்தேன்.
ஜாதகம் இணைக்கப் பட்டிருந்த ஒரு பெண்ணின் முழுவிபரங்களை பிரிண்ட் எடுத்துக் கொண்டு,ஜோதிடம் தெரிந்த என் உறவினர் ஒருவரிடம் அப் பெண்ணின்
ஜாதகதைக் காட்டியதில்,இது எனக்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது என்றார்.
பெண்வீட்டாரை ஃபோனில் அழைத்து ஜாதகப் பொருத்தம் பற்றி எடுத்துக் கூறிய போது, அப்பெண்ணிற்குத் திருமணமாகி ஆறு மாதங்களாகி விட்டதாகவும்,
தற்போது முழுகாமல் இருப்பதாகவும் தெரிவித்ததாகக் கூறினார்.
மற்ற பெண்களின் விபரங்களை வைத்துத் தொடர்பு கொண்டதில்,வத்றாயிருப்பில் உள்ள ஒரு பெண்ணின் தந்தை இப்படி ஆரம்பிக்கிறார்.
"என் பெண்ணிற்கு நான் - ட்ரான்ஸ்ஃபரபிள் டீச்சிங் ஜாப்.உங்கள் பையன் இந்தப்பக்கம் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு வருவாரா?"
துரதிர்ஷ்டவசமாக நான் பணியிலிருக்கும் மும்பை பயோ-டெக் கம்பெனிக்கு வத்றாயிருப்பிலோ,அதற்கருகிலோ கிளைகள் ஏதுமில்லாததால்,வத்றாயிருப்புப் பெண்ணைக் கல்யாணம்
செய்து கொண்டு அருகிலிருக்கும் பிளவக்கல் அணை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளை வாழ்க்கை முழுவதும் ரசிக்கும் பாக்கியம் எனக்கு ப்ராப்தியாகவில்லை.
என் கஸின் ஒருவரது வற்புறுத்தலின் பேரில் த ஹிந்து நாளிதழில் ஞாயிறு அன்று வெளியாகும் வரிவிளம்பரத்தில் நான்கு வாரங்களுக்கு விளம்பரம் செய்ததில்
நிறைய பெண்வீட்டாரிடமிருந்து ஃபோன்களும்,இ-மெயில்களும் வந்திருந்தாலும்,எல்லாம் ஜாதகப் பொறுத்த டகாஸிஸ் கேஸ்சிலில் அடிபட்டு விழுந்தன.விளம்பரத்தின் சைடு எஃபெக்டாக
ஏகப்பட்ட தனியார் திருமண ஏஜென்சிகளிடமிருந்தும் மெயில்பாக்ஸ் கொள்ளாத அளவுக்கு மெயில்கள்.அவர்களிடம் உறுப்பினராகச் சேரச் சொல்லி வற்புறுத்தி.
இருந்தாலும் அவ்வப்போது சாதியிலோ,ஜீவன் சாதியிலோ,கன்னட மேட்ரிமோனியிலோ தினசரி விருப்பம் தெரிவித்த, பதில் கேட்டு மெயில்கள் பல வந்து கொண்டுதானிருக்கின்றன.
எனக்கு ஒரு ஃபார்வர்டு மெயில் வந்தது.உலகில் 99.5 சதவீத பெண்கள் அழகானவர்கள்;மீதமுள்ள 0.5 சதவீத பெண்கள் என் க்ளாஸ் மேட்ஸ் என்று. அது போல, எனக்கு எல்லா விதங்களிலும்
பொருத்தமுள்ளதாக, நன்கு லட்சணமாக இருக்கும் அநேகமாக எல்லாப் பெண்களும் நான் பிறந்த அதே காசியப கோத்திரத்தில் பிறந்து(த் தொலைத்து) என் பாச மலர்களாகி விட்டார்கள்.வேறு கோத்திரத்தில் பிறந்து
நிறையப் பொருந்தி வரும் சில பெண்களிடமிருந்தும் எனக்கு விருப்பம் தெரிவித்து வந்திருந்தன.
சாம்பிளுக்கு சில.
32 வயதாகும் பி.எச்.டி.படிக்கும் ஒரு பெண் விருப்பம் தெரிவித்திருந்தார்.அவரைப் பற்றி மேலும் தகவலறிய அவர் ப்ரொஃபைலைப் படித்ததில்,ஒரு நாளைக்கு 15 மணி நேரம்
ஆராய்ச்சியில் ஈடுபடுவாராம்.ஆராய்ச்சி பற்றிய இன்ன பிற விபரங்கள்... அவர் வசிக்கும் அந்தச் சின்ன டெஸ்ட் ட்யூபுக்குள் நான் ஒண்டி வாழ்வது கஷ்டம் என்று நாசூக்காக மறுத்து விட்டேன்.
மும்பையில் இருந்து இன்னோரு பெண்...29 வயது.அட்வர்டைசிங் துறையில் பணி.சரி.பரவாயில்லை என்று முழுக்கப் படித்ததில் "ட்ரிங்" என்கிற கட்டத்துக்கு அருகில் "எப்போதாவது"
என்று பூர்த்தி செய்திருந்தார்.எனக்குப் பின் புலத்தில் பழைய பாட்டான "குடி மகனே.... ஹே ஹே ஹே. பெருங்குடிமகனே...நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு...
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு...ஓடியது."
28 வயதாகும் மைசூர்ப் பெண்,சைன் டிஸ்ட்,குரூப் -ஏ பணியிலிருப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்க -மற்றவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று எழுதியிருந்தார்.
இது போக டாக்டர் பெண்கள் எல்லோரும் "டாக்டர்கள் மட்டும் விண்ணப்பிக்க" என்று சிரிஞ்சோடு எழுதியிருந்தார்கள்.(சொந்தமாக க்ளினிக் வைத்திருந்தால் சாலச்சிறந்தது என்றும் பின்குறிப்புகள்)
நானும் டாக்டர் தான்,ஆனால் மாட்டு டாக்டர் என்று எழுதி வாங்கிக் கட்டிக்கொள்ள மனம் வரவில்லை.(பின்னால் க்ளினிக் வைத்து மாடு,மனிதர் இருவரையும் ஒரே க்ளினிக்கில்
மருத்துவத்திற்கு வரவழைப்பதில் சில ப்ராக்டிகல் டிஃபிக்கல்ட்டீஸ் உள்ளன)
மேற்கண்ட முயற்சிகள் தவிர தனியாக இது போன்று திருமண அரேஞ்மெண்ட் செய்பவர்களாக ,ஜாதகப் பரிவர்த்தணை செய்யும் சிலரிடம்
(நங்க நல்லூர்,வியாசர்பாடி,நுங்கம்பாக்கம்,ஸ்ரீரங்கம்,மதுரை) தலா முன்னூறு ரூபாய் கொடுத்து என் விபரங்களையும் ஜாதகத்தையும் பதிந்து உள்ளேன்.
அவர்களிடமிருந்தும் அவ்வப்போது தகவல்கள் வரும்.
ஆனால் ஜாதகப் பொறுத்த முதலை வாயில் கஜேந்திர கதி மோட்சம் தான்.
பொருந்தி இருந்த ஒரே ஒரு பெண் ஜாதகத்தை வேறு ஒரு ஜோதிடரிடம் காண்பிக்கப் போய்,அதற்கு அவர்,"இதில் ஒன்று சுத்த ஜாதகம்,
இன்னொன்று,தோஷம் வந்து நிவர்த்தியான ஜாதகம்.இவைகளை சேர்த்தால் சண்டை சச்சரவுகள் வரும்:அதிகபட்சம் ஆளையே காலி பண்ணி விடும்" என்று
ஆட்டோ அனுப்பாத குறையாய் அச்சுறுத்தினார்.
இது இப்படியிருக்க, சமீபத்தில் கயாஸ் தியரி பற்றிக் கால்வாசிப் (பார்த்துப்)புரிந்து கொண்டு எதைச் செய்தால் அதனுடைய பின் விளைவாக என் திருமணத்திற்குத் தக்க பெண் கிடைப்பாள்
என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
மும்பையில் பட்டாம்பூச்சிகள் கிடைக்கவில்லை என்பதால் அடுத்து சென்னை வரும்போது மொத்தமாகப் பட்டாம் பூச்சிகள் வாங்கி செலக்டிவ்வாக
நங்கநல்லூர், மயிலாப்பூர்,மாம்பழம் திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் பறக்க விடத் திட்டமிட்டுள்ளேன்.அவைகள் பறந்து அந்த ஏரியாக்களில் இருக்கும் எனக்கேற்ற பெண்களை/அவர்களின் பெற்றோர்களை
என் இன்பாக்ஸிற்கு மெயில் அனுப்ப வைக்கும் என்று கயாஸ் தியரியின் படி திடமாக நம்புகிறேன்.அதுவரை என் அறையில் இருக்கும் டேபிள்,டி.வி.போன்ற பொருட்களை இடம் மாற்றி வைத்துக் கொண்டு
அதனால்,ஏதேனும் குறுகிய கால கயாஸ் விளைவுகள் நிகழலாமோ என்கிற எண்ணத்தில் பொழுது போய்க்கொண்டிருக்கிறது.
இப்படிக்கு
கயாஸ் தியரியால் கல்யாணம் நடக்கக் காத்திருப்பவன்.
Posted by
பிரகாஷ்
at
6:00 PM
9
comments
Labels: சொந்தக்கதை, நகைச்சுவை
March 25, 2008
கலை உண(ர்)வு
சமீபத்தில் டெல்லிக்கு சென்றபோது உணவு சம்பந்தமான AAHAR-2008 பன்னாட்டுக் கண்காட்சியில் எடுக்கப்பட்ட சில செல்படங்கள்







Posted by
பிரகாஷ்
at
5:22 PM
3
comments
Labels: புகைப்படம்
March 22, 2008
முசுடு சங்கரலிங்கமும்,புக்ஃபியஸ்டாவும்
உலகின் கடைசி மனிதனாக தனியே வாழத் தயாரா? என்று என்னிடம் யாராவது கேட்டால்,
"-என்னுடன் புத்தகங்களும் இருக்கும் பட்சத்தில்-சரி" என்று சொல்வேன்.அந்த அளவுக்கு, புத்தகங்கள் என் வாழ்க்கையோடு ஒன்றிவிட்டன..
சின்ன வயதில் கோடை விடுமுறைகளில் பாட்டி சொல்லும் ராஜா கதைகளில் லயித்த மனம் வருடம் முழுவதற்கும் அதற்காக ஏங்கி ரத்னபாலா, அம்புலிமாமாக்களை இரண்டாம் வகுப்புப் படிக்கையிலேயே எழுத்துக்கூட்ட ஆரம்பித்திருந்தேன்.
வீட்டில் எல்லோரும் சினிமாவிற்கு சென்று திரையின் காட்சிகளில் தங்களை மறந்திருக்கையில் எனக்கு மட்டும் ஆபரேட்டர் அறை ஓட்டை வழியே வரும் வண்ணப்புகை மாறிக்கொண்டே இருப்பதைப் பார்க்கப் பிடிக்கும்.(முழுசா ஒரு ரூபா குடுத்து இவன படத்துக்குக் கூட்டிட்டு வந்தது வேஸ்ட் என்று எனது மூத்த அக்கா திட்டுவாள்)
அதற்கடுத்த சமயங்களில் என் டிக்கட் காசு காமிக்ஸ் புத்தகங்களாகிப் போனது(விஷ ஊசி வேங்கப்பா, ஸ்பைடர்மேன்,இரும்புக்கை மாயாவி)
கொஞ்சம் வளர்ந்து நான்காம், ஐந்தாம் வகுப்புப் படிக்கையில் முழுப்பரீட்சை விடுமுறையில் வீட்டில் உக்கிரான அறை என்னால் தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டு,கொலு வைப்பதற்கென்று பாட்டி பத்திரப்படுத்தியிருந்த பொம்மைகளை (ஆதிசேஷன் நாகம், மச்ச அவதாரம், ஆந்தை, குப்புறப்படுத்திருக்கும் சீனப்பாப்பாக்கள்)வெளியே விளையாடக் கொண்டு போவதைப் பொறுக்க முடியாத பாட்டி, கோபத்துடன்"வாசகசாலைக்குப் போடா" என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளுவார்.வேறு வழியின்றி தே.கல்லுப்பட்டி நூலகம் அடைக்கப்படும் வரை அங்கேயே கிடந்து மஞ்சரி,அ.மாமா என்று எதையாவது வாசித்துக்கொண்டிருப்பேன்.
எட்டாம் வகுப்புப் படிக்கையில் கஷ்டப்பட்டு நூலகத்தில் உறுப்பினரானேன்.அதற்கு ஹெட்மாஸ்டரிடமெல்லாம் கையெழுத்து வாங்க வேண்டியிருந்தது.
அப்போதைய லைப்ரரியன் முசுடு சங்கரலிங்கம் (பட்டம்-உபயம்: நானும் என் நண்பன்ஜெயக்குமாரும்)லைப்ரரியை ஒரு மியூசியம் போலப் பாதுகாத்து வந்தார்.(புத்தகங்கள் படிப்பதற்கு அல்ல-பாதுகாப்பதற்கே என்பது அவர் பாலிசி)
அதிலும் நான் புத்தகம் எடுக்க வந்தால் என் மீதே கண்கொத்திப் பாம்பாய் இருப்பார்.
அவருக்கு சவால் விடும் வகையில் காலையில் டிஃபன் சாப்பிட்டுவிட்டு எட்டரைக்கு உள்ளே நுழைந்து தேட ஆரம்பித்தால்,பதினொன்றரைக்கு நூலக நேரம் முடிந்து அவர் என்னைக் குறிப்பாக முறைத்துக் கொண்டே,மேசைமணியை கடுப்பாக அழுத்தும் வரை
நிதானமாகத் தேடி விட்டு போனால் போகட்டும் என்று ஒரு புத்தகத்தை அவரிடம் நீட்டுவேன்.(சி.ஐ.டி.சங்கர்லால்,ராஜேஷ்குமார்,ராஜேந்திரகுமார்)
"வெலைக்கா வாங்கப் போற? ஏதாவது ஒண்ண எடுத்துட்டுப் போய்ட்டு, நல்லா இல்லாட்டி நாளைக்கு வந்து மாத்திக்க வேண்டியதுதான" என்று முணுமுணுப்பார்.அதையும் நான் மதியமே படித்து விட்டு சாயங்காலம் போய் வேறு புத்தகம் கேட்டு அவரால் திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறேன்."நாளைக்குத் தான் புத்தகத்தை மாத்த முடியும்" என்பது ரூல்.
மு.ச இல்லாத நாட்களில் உதவி நூலகர் விவேகானந்தனிடம் (இவர் மிகவும் சாது: எங்களுக்கு கருணை காட்டுபவர்)சொல்லிவிட்டு அன்அக்கவுண்டில் ஐந்து புத்தகங்களை எடுத்துச்செல்வேன்.வருடாந்திர ஆடிட்டிங்கில் கல்லுப்பட்டி நூலகத்திலிருக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்களை எண்வரிசைப்படி அடுக்கி வைக்க என் உதவி தேவைப்பட்டதால் சில மாதங்களிலேயே மு.ச. என் வழிக்கு இறங்கி வந்தார்.
விடுமுறைகளில் சாப்பிடுவது, தூங்குவது,பாத்ரூம் போகும் நேரம் தவிர மீதி எல்லா நேரங்களிலும் நூலகத்திலேயே பழியாய்க் கிடந்ததால் இரண்டு வருடங்களில் பைண்டிங் அட்டையை வைத்தே அது என்ன புத்தகம் என்று சொல்லுமளவுக்குத் தேறியிருந்தேன்.
மு.ச கூட குறிப்பாய் ஏதேனும் புத்தகம் தேட என்னிடம்தான் கேட்கும் நிலை வந்தது.
எவ்வளவு நாளைக்குத் தான் இரவல் புத்தகங்களைப் படிப்பது?நமக்கென்று சொந்தமாக (அ.மாமா, காமிக்ஸ் தவிர) புத்தகங்கள் வேண்டாமா? என்று ஏங்க ஆரம்பித்தேன்.ராணியில் வந்த விளம்பரம் ஒன்றைப்பார்த்து,வி.பி.பி.யில் அனுப்பச் சொல்லி கார்டில் எழுதிப்போட்டு, முதன்முதலாக நான் வாங்கிய நவமணியின்"வெளிநாட்டுக்குப் போவது எப்படி?" எனக்கு வந்த போது எனக்குக் கிடைத்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.(நீங்கள் வாங்கிய முதல் புத்தகம் எது என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?)
அப்போதெல்லாம் கிருஷ்ணா காஃபி, வெண்ணெய் இன்னும் சில சாமான்கள் வாங்க நாற்பது கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மதுரைக்கு மாதம் ஒருமுறை செல்லவேண்டியிருக்கும்
வீட்டுக்கு வேண்டிய சாமான்களை வாங்கிவிட்டு,காவேரி மஹாலுக்கு எதிரில் இருக்கும் வெண்ணெய்க் கடையில் நான்கு கிளாஸ் மோர் குடித்துவிட்டு மாடர்ன்ரெஸ்டாரண்டில் மதியம் சாப்பிட வீட்டில் கொடுத்த பணத்தையும் கால்சியம் சாண்டோஸ் நாய்பொம்மை உண்டியலில் இருந்து எடுத்த என் சிறுசேமிப்பையும் சர்வோதய இலக்கியப்பண்ணை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், காலேஜ்ஹவுஸ் புக் ஷாப் என்று சுற்றி எனக்குப் பிடித்த புத்தகங்களை வாங்குவேன்.
இப்படியாகத் தொடர்ந்த பழக்கம் இப்போதும் சம்பளத்தில் ஐந்து சதவீதம் புத்தகங்களுக்காக செலவிடும் வரை நீடித்திருக்கிறது.
இதை ஒரு மூலதனம் என்றுதான் சொல்ல வேண்டும்.இருப்பினும், ஹார்வர்டு பிஸினஸ் ரிவ்யூ போன்ற விலையுயர்ந்த மாத இதழ்களையெல்லாம் எப்படியாவது (இலவசமாக)படிக்க முடியாதா என்னும் தேடலுடன் அலைந்த நான் ஒரு நாள் இணையத்தில் கூகுள் அருளால் தற்செயலாக புக்ஃபியஸ்டா என்னும் தளத்திற்கு விஜயம் செய்தேன்.அறிவியல் முதல் ஆன்மிகம் வரை, ஆங்கில மொழித் தேர்ச்சி முதல் மேலாண்மை, தலைமைப் பண்பு, புகழ் பெற்ற நூலாசிரியர்கள் எழுதிய சுய முன்னேற்றப் புத்தகங்கள் என்று இன்னும் ஏராளமான தலைப்புகளில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை இலவசமாகக் கொடுக்கும் இணையதளம் அது.
ஸ்டீஃபன் கோவி போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் ஆடியோ புத்தகங்கள் கூட உண்டு
சில நிமிடங்களிலேயே உங்களுக்குப் பிடித்தமான புத்தகத்தைத் தரவிறக்கம் செய்துகொண்டு,
நேரம் கிடைக்கும் போது படிக்கலாம்.முதலில் ப்ளாக்ஸ்பாட்டாக இருந்த இத்தளம் இப்போது அதிக வசதி மற்றும் சிறப்புகளுடன் www.bookfiesta4u.com மாக வளர்ந்துள்ளது.
வெறும் வதந்திகளையும், இந்த மெயிலை ஒன்பது பேருக்கு ஃபார்வர்டு செய்யாவிடில் ஒன்பது நாட்களுக்குள் ரத்தம் கக்கிச் செத்து விடுவீர்கள் என்பது போன்ற மிரட்டல் மெயில்களையும் அனுப்பாமல் புக்ஃபியஸ்டா போன்ற நல்ல பயனுள்ள இணையதளம் பற்றி எல்லோரிடமும் பகிர்ந்து அவர்களது அறிவை வளர்க்கவும் நேரத்தையும், பணத்தையும் சேமிக்கவும் உதவுங்கள்.
Posted by
பிரகாஷ்
at
11:24 PM
2
comments
Labels: கட்டுரை



























