January 1, 2008

கனவுகள் செய்வோம்-2

உறக்கத்தின் போது மூளை முழுவதுமாக ஃப்ளாட் ஆகி விடுகிறது என்கிற முந்தின
கோட்பாட்டைத் தவறென்று தன் ஆராய்ச்சிகள் மூலம் டாக்டர் நத்தானியெல் நிரூபித்து,
மூளை, தூக்கத்தில் ரெம் (Rapid Eye Movement) நிலையில் இயங்குவதை உறுதிப் படுத்தினார்.1950களில் டாக்டர் வில்லியம் மற்றும் சார்லஸ் ஃபிஸ்சர் நியூயார்க்கில்,ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.தாமாக முன்வந்து பரிசோதனைக்கு ஒப்புக்கொண்ட குழுவினரை எலெக்ட்ரோ என்செபலோகிராஃப் உதவியுடன் அவர்கள் உறக்கத்தில் கனவுகள் தோன்றும் ரெம் நிலையை அடையும் போதெல்லாம் (கண்டறிந்து)இரவு முழுவதும் எழுப்பி விட்டனர். தொடர்ந்து 5 நாட்களுக்கு இப்படி அவர்களுக்கு கனவு நேரம் தவிர்த்து உறக்க நேரம் மட்டும் அளித்து சோதனை செய்ததில்,கனவுகளற்ற 5 தினங்களுக்குப் பின் சிடுசிடுப்பு,அதீதப் பதட்டம்,
மனம் ஒருமைப்படுத்துவதில் சிரமம் போன்றவைகளை வெளிப்படுத்தினர்.இதே போல் இன்னொரு குழுவை,முதல் குழுவினரை எழுப்பிய அதே தடவைகள் -ஆனால் அவர்கள் கனவு
காணாதிருக்கும் போது- எழுப்பி விட்டதில் முதல் குழுவினருக்குத் தோன்றிய எந்த பாதிப்பும் இவர்களிடம் தோன்றவில்லை.இந்த பரிசோதனை முதல் முறையாக ஆரோக்கியமான உடற்செயலியலுக்குக் கனவு காண்பது மிக முக்கியம் என்று நிரூபித்தது.இதன் மூலம் தொடர்ந்து போதுமான உறக்கமின்றி ஷிஃப்டில் இயங்கும் ஒருவரோ அல்லது தொடர்ந்து வாகனம் ஓட்டுபவரோ எவ்வளவு பெரிய ஆபத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவு.
கனவுகளின் வெளிப்பாட்டில் சுற்றுப்புறம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.புதிய இடத்திலோ,அல்லது ஹோட்டல் போன்ற பழக்கப்படாத இடங்களில் நமக்கு வித்தியாசமான கனவுகள் தோன்றுகின்றன.மற்ற காரணிகளாக கனவு காண்பவரது கடந்த கால நினைவுகள்,அந்த வார அல்லது அந்த நாளின் எஞ்சிய நினைவுகள்,உறங்குவதற்கு முந்தைய எண்ணங்கள் போன்றவை இருக்கின்றன.கனவு காணும் நேரம் ஒரு சர்ச்சைக்குரிய
ஒன்றாகவே இருக்கிறது.சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு நொடிகள் தான் நாம் கனவு காண்கிறோம் என்கின்றனர்.ஆனால், சிலசமயம் நமக்குத் தோன்றும் சில மெகா சீரியல் கனவுகள் இதை சந்தேகம் கொள்ள வைக்கின்றன.
கனவுகள் சிக்கலான பல முடிச்சுகளை அவிழ்க்க விஞ்ஞானிகள், கலைப்படைப்பினருக்கு பெரிதும் உதவியிருக்கிறன. 1902ல் ஒட்டோ லெவி, நியூயார்க் யுனிவர்சிடியில், தான் 17 வருடங்களுக்கு முன் தவறென்று ஒதுக்கி வைத்த ஒரு கோட்பாட்டைத் தன் கனவைப் பின்னொற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட போது உடற்செயலியலில், தசைத் தூண்டுதல்களுக்கும் அசிடைல்கோலைன் என்கிற வேதிப் பொருளுக்குமான தொடர்பைக் கண்டறிந்து அதற்காக நோபல் பரிசை வென்றார்.மேலும், உறக்கத்தின் போது ஒரு மனதிலிருந்து இன்னொரு
மனதிற்கு எண்ணங்கள் பயணிக்கின்றன என்றும் கண்டறியப்பட்டது.ஆனால்,தான் சாகும் வரை இந்த அசிடைல் கோலைன் பற்றிய ஒரு எண்ணம் எங்கிருந்து, யாரிடமிருந்து
வந்தது என்பதற்கு ஒட்டோ லெவியிடம் பதிலில்லை.
உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் தங்களது சிக்கலான பிரச்சனைகளுக்குக் கனவுகள் மூலம்
விடை கண்டறிந்து வெற்றியடைகின்றனர். உறங்கும் முன் ஏதேனும் பிரச்சனையை மனதில் நினைத்துக் கொண்டேயிருந்தால், உறக்கத்தில் ஆழ்மனம் அதற்கு நல்ல தீர்வுகளை முன்வைக்கிறது.இதற்கு வேண்டியதெல்லாம் உத்வேகமும்,தொடர்ந்த முயற்சியும், சிறிது மனப்பயிற்சியுமே.
கனவுகளில் நாம் காணும் பொருள்கள் முழுக்க முழுக்க தனிநபருக்கே உரித்தான தனிப்பட்ட
அர்த்தமுடையது என்றாலும் கனவுலக ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் ஒத்துக் கொண்ட கனவுகளில் தோன்றும் சில அடையாளப் பொருள்களும் அவைகளின் பொதுவான அர்த்தங்களும் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

தேவதை: அறிவு, ஞானம்,சத்தியம், உயர்ந்த ஆத்மாக்களுடன் உள்ள தொடர்பு.

குளித்தல்: ஆத்ம சுத்தி, அல்லது ஆத்ம சுத்திக்கான அவசியம்.

பூனை: உலகம் முழுவதும் கனவில் வரும் பூனை பெண்களைக் குறிப்பதாகப் படுகிறது.வம்பு பேசுதல்,வம்பு தவிர்த்தல், மர்மம்.தனித்திருத்தல்

கோவில், சர்ச்: உள்ளுணர்வு,ஆன்மீகத் தேவை.

பாலைவனம்: ஆன்மீக வெறுமை,மலட்டுத்தன்மை,உணர்ச்சிகளற்ற நிலை.

சாத்தான்: வெறுக்கத்தக்க மனிதர்,தடை செய்யப்பட்ட விஷயம்,மோசமான குழந்தைப் பருவமென்றால் பெற்றோர் உருவம்

கீழே விழுதல்: இயற்கையான(குழந்தைகளின்) பயம், தோல்வி, உயர் நிலையிலிருந்து கீழே விழுதல்

தலைமுடி:
ஆரோக்கியமான சுத்தமான கேசம்:ஆன்மீக அழகு
சிக்கலான அழுக்கான கேசம்: தூய்மையற்ற மனம்
வழுக்கை: வயதைக் குறித்த பிரக்ஞை

நீதிபதி: சுய கட்டுப்பாட்டுத் தேவை,உள்ளார்ந்த குற்ற உணர்வு

சாவி: பிரச்சனைக்குத் தீர்வு, புதிய வாய்ப்புகள்

ஏரி:(அமைதியான நீர் எனில்) அமைதி

கண்ணாடி: தன்னைக் குறிப்பது, இல்லாத ஒன்று.

(தையல்)ஊசி: பழைய பிழைகளை சரி செய்தல்

கடல்:ஆத்மா, கடவுள்,அமைதி.

பன்றி:சுயநலம்

சுற்றத்தார்:கனவு காண்பவரின் ஒரு பகுதி

பெட்டி: வளமை, பயணத்திற்கு விருப்பம்,சுயகெளரவம்.

சூரியன்:ஆன்மீக ஒளி, விழிப்பு நிலை

பல் இழத்தல்:மதிப்பு மிகுந்த ஒன்றை இழத்தல்

தண்ணீர்:வாழ்க்கையின் ஆதாரம்,ஆன்மா, கடவுள்

தொடரும்.

1 comment:

Anonymous said...

You started with Arviyal, but ended with myth. Confusing man
Rajkumar S