December 14, 2007

மார்கழி மகிமை

எல்லா மாதங்களுமே நல்லவைதான் என்றாலும் சூரியன் தனுர் ராசியில் சஞ்சரிக்கும்
மார்கழிக்கென்று சில விஷேசங்களுண்டு.
டிசம்பரின் மத்தியில் தொடங்கி, ஜனவரியின் மத்தியில் முடியும் இந்த மாதம் உலகம்
முழுவதும் உள்ள மக்களை நல்ல விதமாய் பாதிக்கிறது.இஸ்லாத்தில்,ஆபிரகாம், தன் மகன்
இஸ்மாயிலை அல்லாவிற்காக திருப்பலி கொடுத்துக் காணிக்கையாக்கும் "ஈத் பெரு நாள்" வருவது இந்த மார்கழியில் தான்.உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரையின் நிறைவைக் குறிக்கும் இந்த நாளில் புத்தாடை அணிந்து தங்களுக்கு பிரியமான வீட்டு விலங்குகளை அல்லாவிற்குப் படைத்து தங்களின் தியாகத்தை வெளிப்படுத்துவர்.
கிறிஸ்தவர்களது முக்கியமான பண்டிகையான இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் வருவதும் இந்த மாதத்தில் தான்.
பகவத்கீதையில், கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனிடம்,"மாதங்களில் நான் மார்கழி" என்கிறார்.
இந்து சமயத்தின் வேதங்களும், ஆகமங்களும், மார்கழி மாதத்தை இறை வழிபாட்டுக்கு மிகவும் உகந்த மாதமாகக் குறிப்பிடுகின்றன.சொல்லப் போனால், இறைவழிபாடு தவிர மற்ற எல்லாவற்றையுமே ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு இந்த மாதம் முழுவதுமே ஆன்ம வளர்ச்சியில் ஈடுபடும் வழக்கமும் இங்கு உண்டு.எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில்,மதுரைக்கு அருகிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த கோதை நாச்சியார் மார்கழியில் தான் திருப்பாவைப் பாடல்கள் பாடி, பாவை நோன்பிருந்து,
"நெய்யுண்ணோம்,பாலுண்ணோம்,கண்ணுக்கு மையிடோம்" என்று,இறைநிலை உணர்வுக்கெதிரான எல்லாவற்றையும் ஒதுக்கி, எம்பெருமான் பாதம் சேர்ந்தாள். (இன்றும் மார்கழியில் திருமணம் போன்ற எந்த விஷேசங்களும் நிறைய சமூகங்களில் நடைபெறுவதில்லை)
வைணவர்களுக்குத் திருப்பாவை என்றால், சைவர்களுக்கு மாணிக்க வாசகர் எழுதிய திருவெம்பாவை.
நமக்கு பிரம்ம முகூர்த்தம் அதிகாலை நான்கு மணிமுதல் ஆறு மணி வரை.அது போல, தேவர்களுக்கு மார்கழி மாதம் முழுவதுமே பிரம்ம முகூர்த்தம் தான். இந்த மார்கழியில்,சிவபெருமானும், ஏனைய தேவர்களும் பூமிக்கு வந்து தவமிருப்பதாக ஐதீகம்.சிவபெருமான், சிதம்பரத்தில் நந்தனாருக்காக, நந்தியை சற்றே தலையைத் திருப்பச் சொல்லிக் காட்சியளித்து நந்தனாரை ஆட்கொண்ட "திருவாதிரைத் திருநாள்" வருவதும் மார்கழியில் தான்.இந்தியா முழுவதும் உள்ள கோவில்களில் மார்கழி மாதத்தில் அதிகாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.மார்கழி ஏகாதசியில் விரதமிருந்து,இரவு முழுவதும் விழித்திருந்து இறைவனது நாமம் சொல்லி, விடியலில் பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் வழியே பக்தர்கள் பிரவேசித்துப் பரவசமடைவர்.விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால், மார்கழியில் அதிகாலைப் பொழுதில்,வளி மண்டலத்தில்தூய்மையான ஒஸோன் படலம் பூமிக்கு மிகத் தாழ்வாய் இறங்கி வருவதாகவும், அதை சுவாசித்தால், நோய் எதிர்ப்பு சக்தியும், ஆரோக்கியமும் கிடைப்பதாலேயே நம் முன்னோர்கள் அதை இறைவழிபாடு என்ற பெயரில் நாம் கேள்விகள் கேட்காமல் பின்பற்றும் சடங்குகளாக்கி விட்டனர் என்பதும் நிரூபணமாகாத உண்மையே.
மார்கழி பஜனையில் ஆண்கள் சத்தமாகப் பாடல்கள் பாடி,(அப்போது நன்றாக மூச்சு விட்டு ஓஸோனை உள்ளிழுத்து)ஊர் முழுவதும் சுற்றி வருவர்.பெண்கள் குனிந்து நிமிர்ந்து பயிற்சி செய்யும் வண்ணம் பெரிய பெரிய கோலங்களை விடியற்காலையில் போடும் போதும் அதே நல்ல விளைவுகள்.(இப்போது முன்னிரவு பதினோரு மணிக்குக் கோலம் போட ஆரம்பித்து ஒரு மணிக்கு முடித்து காலையில் எட்டு மணி வரை உறங்கும் இந்தக் காலத்துப் பெண்களுக்கும் இந்தக் கட்டுரைக்கும் எந்த சம்பந்தமுமில்லை)
எங்கள் ஊரில் அதிகாலையில் எழுந்து, குளிரில் குளித்து பஜனை பாடி, ஊர் வலம் வந்த என் பள்ளி நாட்கள் மனதை வருடிச் செல்லும் மயிலிறகுக் காலங்கள் (என் மூன்றாம் வகுப்புக் காலங்களில் குளிக்காமல்,பல் மட்டும் துலக்கி (பிரசாதம் வாங்க)பஜனைக்குச் சென்று இருக்கிறேன்.)
கார்த்திகையில் மாலை போட்டு, விரதமிருக்கும் ஐயப்ப பக்தர்கள் சரணம் சொல்லி, இருமுடி தாங்கி, ஒருமனதாகி சபரிமலை யாத்திரை செண்று விரதம் முடிப்பது இந்த மாதத்தில் தான்.(எங்கள் தெருவில் உள்ள ஐயப்பன் கோவிலில் துண்ட ராமசாமி (தொண்டர் ராமசாமி தான் அப்படித் தேய்ந்து விட்டது) மார்கழி முழுவதும் போட்ட மைக் செட் பாடல்கள் நான் ஒவ்வொரு அரைப் பரீட்சையிலும் குறைவாய் மார்க்குகள் எடுத்ததற்கு ஒரு சாக்கு சொல்ல ரொம்ப காலம் பயன்பட்டது)
மார்கழியில் விரதம் இருப்பது உடல் நலத்திற்கு மட்டுமல்லாது மன வலிமையை வளர்க்கவும் உதவும். இந்த ஒரு மாதத்தை இறை உணர்வுடன் சிரத்தையாய்க் கழித்தால் அதனால் வரும் உன்னத குணங்களும், உடல் மற்றும் மன நலன்களும் அடுத்து வரும் வருடம் மட்டுமல்லாது வாழ்நாள் முழுவதும் நம்முடனிருக்கும். இந்த வாழ்க்கையை சிறப்பாய் வாழவும்,நம் குறிக்கோள்களை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தவும் மார்கழி நமக்குத் துணையாய் இருக்கட்டும்.

4 comments:

ஹரன்பிரசன்னா said...

short and sweat.

கானகம் said...

பிரகாஷ், நல்ல பதிவு. எல்லா விஷயங்களையும் நன்கு தொகுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். ஹரன் பிரசன்னா சொன்னது ஷார்ட் அண்ட் ஸ்வீட். நாட் ஸ்வெட்.

பிரகாஷ் said...

நன்றி பிரசன்னா.

ஜெயக்குமார்,
நன்றி.
அது "ஷார்ட் அண்ட் ஸ்வெட்" டாக இருந்தாலும் இந்த மார்கழிக் குளிருக்கு கத கதப்பூட்டும் கணப்பே.

கானகம் said...

அடேங்கப்பா என்னமா சமாளிக்கிறாய்ங்க...