December 28, 2007

கனவுகள் செய்வோம்-1

நேற்றிரவு என்ன கனவு கண்டீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? எனக்குக் கனவே வருவதில்லை என்று நீங்கள் சொன்னால் அது சும்மா உடான்ஸ்.நம் எல்லோருக்குமே கனவுகள் வருகின்றன.நம் தூக்கத்தில் சுமார் 25% நேரம் கனவு காண்பதில் செலவிடுகிறோம். கனவு காண்பது வலதுபக்க மூளையின் செயல்பாடு.ரெம் (REM-Rapid Eye Movement) நிலையிலே தான் நமக்குக் கனவுகள் வருகின்றன.ஒவ்வொருவரின் ஆளுமைக்கேற்ப கனவுகள் வேறுபடுகின்றன.பொதுவாக,உணர்ச்சிகளின் உந்துதல்கள்,நிறைவேறாத ஆசைகள்,வருங்காலத்தைப் பற்றின ஊகங்கள்,மனதை மிகவும் பாதித்த விஷயங்கள் என கனவுகளுக்கான கருக்கள் நிறைய உண்டு.
கனவுகள் எகிப்து போன்ற பண்டைய மரபுகளில் மிக முக்கிய இடத்தை வகித்து வருகின்றன.
இன்னும் நிறைய மரபுகளில், கனவுகள் கடவுளிடமிருந்து வரும் செய்தியாகக் கூடக்
கருதப்படுகின்றன.
அறிவியல் முன்னேற்றத்திற்குக் கனவுகள் ஆற்றிய பங்கு அளப்பரியது.பெரிதும் உதாரணமாய் சொல்லப்படும் பென்சீன் வளைய மூலக்கூறு அமைப்பு கெக்கூல் என்கிற விஞ்ஞானியின் கனவில் தோன்றியது தான்.ரஷ்ய விஞ்ஞானி மெண்டலீவ் தனிம வரிசை அட்டவணையையும்,எலியாஸ் தையல் இயந்திரத்தைக் கண்டறிந்ததும் அவர்களின் கனவுகளின் உதவியால் தான்.ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியின்
பெரும்பகுதி அவரது கனவுகளில் கண்டறியப்பட்டதே.
சிக்மண்ட் ஃப்ராய்டு அதற்கு முன்பிருந்த கனவுகள் பற்றிய எல்லாக் கோட்பாடுகளிலிருந்தும் விலகி,"ஒடுக்கப்பட்ட நம் ஆசைகளின் வெளிப்பாடே கனவுகள்:அவைகள் பெரும்பாலும்
காமத்தை அடிப்படையாகக் கொண்டவைகளே" என்றார்.
என் அம்மாவிற்கோ, பாட்டிக்கோ ஏதேனும் துர்சொப்பனங்கள் வந்த ஒன்றிரண்டு நாட்களிலேயே யாரேனும் தூரத்து அல்லது பக்கத்து உறவினரின் மரணச்செய்தி வந்து விடும்.
எங்கள் ஊருக்குப் பக்கத்திலிருக்கும் தேவன்குறிச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் பாறையின் மேல் இரவில் உறங்குகையில் வரும் கனவுகள் நிச்சயம் பலிக்கும் என்று என் நண்பனின் தாத்தா சொல்வதுண்டு.
எனக்கு வரும் கனவுகள் கொஞ்சம் விசித்திரமானவைதான்.என் கனவுகளில் நான் எழுதும் மிக நல்ல கவிதைகள் கண்விழித்ததும் ஒரு வரி கூட நினைவில் இல்லாமல் போவது என் வாசகர்களின் துரதிருஷ்டமே.சின்ன வயது முதல் அடிக்கடி எனக்கு வரும் ஒரு கனவு, ஒரு பிரம்மாண்டமான நூலகத்தில் நான் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருப்பது தான்.திரும்பத் திரும்ப வரும் இந்தக் கனவால், அந்த நூலகத்தில் எந்த இடத்தில் எந்தப் புத்தகம் இருக்கிறது என்பது கூட எனக்கு மனப்பாடமாய் ஆகியிருந்தது.
சில கனவுகளின் தொடர்ச்சி இன்னொரு நாளில் வேறொரு கனவாய்த் தொடரும்.
நிறைய முறை மாடி அல்லது உயரமான இடங்களிலிருந்து குதித்துப் பறப்பதைப் போல அடிக்கடி கனவு வரும் (இதனால் பயந்து போய் சின்ன வயதில் மொட்டை மாடியில் உறங்குவதை நிறைய முறை தவிர்த்திருக்கிறேன்)
90களின் இறுதியில் என்னை மிகவும் பாதித்த ஒரு பெண்ணிடம் எனக்கு நேர்ந்த அனுபவங்களின் மொத்த சாராம்சமும் அதற்கு சில மாதங்களுக்கு முன்பே எனக்கு ஒரு பெரிய்ய்ய்ய கனவாக வந்து, அதை என் டைரியில் எழுதியும் வைத்திருக்கிறேன். விடியற்காலை 3 மணிக்கு எழுந்து எங்காவது ரயிலையோ, பஸ்ஸையோ பிடிக்கப் போக வேண்டுமென்றால், சொல்லி வைத்தாற் போல் 2.58க்கு ஏதேனும் ஒரு பயங்கரக் கனவு வந்து 2.59க்கு என்னை எழுப்பிவிடும் விசித்திரம் பல வருடங்களாக எனக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
நம் ஆழ்மனம் பிரபஞ்சத்தோடு தொடர்பு கொள்ளும் முயற்சியே கனவுகளின் வெளிப்பாடு என்று கூட சொல்லலாம்.

சிறிது உறக்கத்திற்குப் பிறகு... தொடரும்.

1 comment:

கானகம் said...

நல்ல கட்டுரை பிரகாஷ்..தொடர் தொடர நித்திரை கலையவில்லையா என்ன???