November 22, 2007

யாரும் பார்க்காத போது

யாரும் பார்க்காத போது
திசைகள் தம் எல்லையைத் திருத்தும்
யாரும் பார்க்காத போது
காலம் சற்று ஓய்வெடுத்துப்
பின் எப்போதும் போல் நகரும்
யாரும் பார்க்காத போது
என் அறைக்குள் வரும் வானம்
யாரும் பார்க்காத போது
தேவதைகளுடன் பேசும் குழந்தைகள்
யாரும் பார்க்காத போது
புணர்ந்து முடித்த இயற்கை
தொடரும் தன் சிருஷ்டியை
யாரும் பார்க்காத போது
பூமிக்கு வந்து போகும் கடவுள்
எந்த விழிகள் மூடக் காத்திருக்கிறதோ
இன்னும் திறக்காத என் மூன்றாம் கண்?

No comments: